"ஹிட் லிஸ்ட்".. ₹58 கோடியாமே.. திமுகவுக்கு "முக்கோண சேலஞ்ச்".. நொறுங்குமா "மேட்ச் பிக்சிங்" யூகம்
வேலுமணிக்கு எதிரான வழக்கில் திமுகவுக்கு 2 சவால்கள் உள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: நேற்றைய தினம் எஸ்பி வேலுமணி மீதான வழக்குகளில் தீர்ப்பு வெளிவந்த நிலையில், திமுக அரசுக்கான நெருக்கடிகள் கூடிஉள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் ஏற்கனவே டெண்டர் முறைகேடு வழக்கில் முகாந்திரம் இல்லை என்று சொல்லப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றத்தில் தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
ஒண்ணு சாதகம்.. இன்னொண்ணு பாதகம்.. வேலுமணி மீதான டெண்டர் வழக்கு ரத்தானது எப்படி? சொல்கிறார் இன்பதுரை!
கேன்சல்
இந்த மனுக்களை நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் ராமன் அமர்வு விசாரித்தது... இதையடுத்து வேலுமணி, தன் மீதான மாநகராட்சி டெண்டர் முறைகேடு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்குகளை ரத்து செய்யக்கோரி ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.. அதன்மீதான தீர்ப்பு நேற்றைய தினம் வெளியானது.. வேலுமணி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், மாநகராட்சி பணிகளுக்கான டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக வேலுமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டது.
சாஃப்ட்கார்னர்
இதனையடுத்து, சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்ந்து நடைபெறும் என்பது உறுதியாகி உள்ளது.. அதாவது, வேலுமணிக்கு சிக்கல் நீடிக்கும் என்பது தெள்ளத்தெளிவாகி உள்ளது.. அதேசமயம், திமுக அரசுக்கு இந்த வழக்குகள் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.. காரணம், ஆட்சிக்கு வந்த இந்த ஒன்றரை வருடகாலத்தில், எடப்பாடி தரப்பு மீது திமுக அரசு சாஃப்ட் கார்னர் வைத்துள்ளதாக ஒரு சலசலப்பு எழுந்து வருகிறது.
ஒன் பை ஒன்
கொடநாடு சம்பவம் நடந்து 6 வருட காலத்துக்கு மேலாகிவிட்டது.. திமுக ஆட்சிக்கு வந்து, ஒன்றரை வருட காலம் ஆகிவிட்ட நிலையில், இன்னும் இது தொடர்பாக வழக்கே பதியப்படவில்லை.. ஆதாரமும் கிடைக்கவில்லை.. எனவே, கொடநாடு கேஸ் எந்தவிதத்திலும் எடப்பாடியை பாதிக்காது என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, ஓபிஎஸ் ஆதரவாளரான மூத்த தலைவர் மருது அழகுராஜ், சில தினங்களுக்கு முன்பு நம்முடைய ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி தந்திருந்தார். அப்போது இதுகுறித்த சில கருத்துக்களையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
மடியில் கனம்
"ஆறுமுகசாமி ஆணைய ரிப்போர்ட், அருணா ஜெகதீசன் ஆணைய ரிப்போர்ட், என எடப்பாடி மீதான அதிருப்தி விவகாரங்கள் மாநில அரசுக்கு கையில் கிடைத்தும், அது தொடர்பாக என்ன நடவடிக்கையை திமுக எடுத்துள்ளது? பல மூத்த அதிமுக மாஜிக்களிடம் ரெய்டுகள் நடத்தப்பட்ட நிலையில், அது தொடர்பாக என்ன நடவடிக்கையை திமுக எடுத்துள்ளது? எடப்பாடியுடனான மறைமுக டீலிங் தான் காரணமா? அல்லது திமுக அரசின் மெத்தன போக்கா?, "மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை" என்று எடப்பாடி தொடர்ந்து சொல்லி வருகிறாரா? அதற்கு திமுகவின் பதிலடி என்ன?
கிழிந்த முகமூடி
திமுகவில் தேர்தல் பிரச்சாரத்தில், முதல்வர் ஸ்டாலின் என்ன சொன்னார்? கொடநாடு கொலைக்கு சூத்திரதாரி, குற்றவாளி எடப்பாடிதான்.. எங்களிடம் அனைத்து ஆதாரமும் இருக்கிறது.. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 30 நாளில் அவரது முகமூடியை கிழித்து, குற்றவாளி கூண்டில் நிறுத்துவோம் என்று சொன்னார்களா இல்லையா? ஒன்றரை வருடமாகிறது.. குற்றவாளிகள் அடையாளம் காட்டிய எடப்பாடியின் இடதும், வலதுமான சேலம் இளங்கோவனை இன்றுவரை விசாரிக்கவில்லையே ஏன்? ஸ்மார்ட் சிட்டியில் 2 லட்சம் டன் நிலக்கரியை காணோம் என்று செந்தில்பாலாஜி சொன்னாரே.. இப்போது அந்த பேச்சையே காணோமே ஏன்? திமுகவுடன் மறைமுக உறவு எடப்பாடிக்கு இருப்பதாக தெரிகிறது" என்று சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தார்.
2 மேட்டர்கள்
இதே கேள்விகளைதான், மூத்த தலைவர் கேசி பழனிசாமியும் ஒருமுறை கேட்டிருந்தார்.. இப்படி திமுக அரசுக்கு நெருக்கடிகள் நாலாபக்கமிருந்து வந்தாலும், சட்டப்படியே அனைத்தையும் முறைப்படி செய்து கொண்டிருந்தது.. இந்நிலையில், வேலுமணி மீதான வழக்குகள் குறித்து திமுக அரசுக்கு மிகப்பெரிய நிர்ப்பந்தம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து சொல்கிறார்கள்.. ஒரு தனியார் டிவிக்கு, ரவீந்திரன் துரைசாமி பேட்டி தந்துள்ளார். அந்த பேட்டியில் அவர் சொன்னதாவது:
ஷார்ப் பாயிண்ட்
"இந்த வழக்குகளில் முதல்வர் ஸ்டாலினுக்கும், திமுக அரசுக்கும் மிகப்பெரிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.. வேலுமணி மீதான வழக்குகளை, அரசு வழக்கறிஞர்களும், புலனாய்வுத்துறையும், மிகத்துல்லியமாக வாதாடி, அவர்மீது போடப்பட்டுள்ள வழக்குகளை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.. ஒருவேளை இதை நிரூபிக்க தவறினால், பெரும்பணத்தை குவித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள், திமுகவுடன் சமரசம் செய்து தப்பிவிடுகிறார்கள் என்று ஸ்டாலின் மீது, எடப்பாடி டீம் அல்லாத கட்சியினரின் விமர்சனங்கள் நிச்சயம் வெளிப்படும்.
ப்ளான் A
அப்படி விமர்சனம் வந்தால், அது ஸ்டாலினின் இமேஜை பாதிக்கக்கூடிய வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.. அந்தவகையில், திமுக வழக்கறிஞர்கள், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது மிக தெளிவாகவும், துல்லியமாகவும் நிரூபிக்க கூடிய அளவுக்கு வழக்குகளை நடத்த வேண்டும்.. விசாரணைகளை முடுக்கிவிட வேண்டும்.. இதை செய்ய தவறினால், "மேட்ச் பிக்சிங்" என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாக திமுக அரசு நேரிடும்.. அப்படி ஒரு குற்றச்சாட்டு வராத வகையிலும், மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் தப்பிவிடாத வகையிலும், திமுக அரசு வழக்குகளை துல்லியமாக நடத்த வேண்டும்.
ப்ளான் B
திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் இதை சொல்லக்கூடாது.. மாஜிக்களுடன் திமுக அரசு சமரசமாகிவிட்டது என்றும் சொல்லக்கூடாது.. அதேசமயம், மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள், ஊழல் செய்தவர்கள், தப்பிவிட நேர்ந்தால், அது சமரசத்துக்கு திமுக போய்விட்டதாகவே கருதப்பட்டுவிடும்.. சட்டத்தில் ஓட்டைகள் எதுவும் இல்லாமல் இந்த வழக்கை மிக திறன்பட திமுக நடத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.