தமிழகத்தில் கொரோனா அதிவேகம்.. தினசரி பாதிப்பு 7,000-ஐ நெருங்கியது.. சென்னையில் மோசமாகும் நிலைமை!
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இந்த முறை முதல் அலையை விட இரண்டாவது அலையின் வீரியம் மிக அதிகமாக உள்ளது. சுமார் 5 மாதங்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. தினசரி பாதிப்பில் இரண்டாயிரம், ஐந்தாயிரத்தை கடந்த கொரோனா தினசரி பாதிப்பு தற்போது 7,000-ஐ நெருங்கி விட்டது.
7,000-ஐ நெருங்கிய பாதிப்பு
கொரோனாவை தடுக்க தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன. பஸ்களில் பயணிக்க கட்டுப்பாடு, தியேட்டர்கள், கோவில்கள், மால்கள் என அனைத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 7,000-ஐ நெருங்கியுள்ளது.
18 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 9,47,129 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 12,945 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 3,289 பேர் குணமடைந்துள்ளனர்.
சிகிச்சை பெறுவோர் எத்தனை பேர்?
இதுவரை மொத்தம் 8,84,199 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 49,985 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 82,236 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 2,03,54,041 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.
கோவையில் அதிகரிக்கும் பாதிப்பு
சென்னை, கோவை, செங்கல்பட்டில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னையில் இன்று மட்டும் 2,482 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 771 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 504 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 204 பேருக்கும், மதுரையில் 254 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 285 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.