"குழந்தை இறந்து 2 மணி நேரமாச்சேம்மா.. உடம்பெல்லாம் ஜில்லுன்னு ஆயிடுச்சே".. கதறிதுடித்த பெற்றோர்!
சென்னை: "குழந்தை இறந்து 2 மணி நேரமாச்சே..ம்மா.. உடம்பெல்லாம் ஜில்லுன்னு ஆயிடுச்சே" என்று டாக்டர்கள் சொல்லவும் பெற்றோர் கதறி துடித்து அழுதுள்ளனர். விமானத்திலேயே 6 மாத குழந்தையின் உயிர் பிரிந்த அதிர்ச்சி நிறைந்த சோகம் சென்னை தம்பதிக்கு நிகழ்ந்துள்ளது!
சென்னையை சேர்ந்தவர் சக்தி முருகன். இவரது 29 வயது மனைவி கீதா. இவர்கள் இருவருமே என்ஜினியர்கள். அதனால், ஆஸ்திரேலியாவில் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களது 6 மா கைக்குழந்தை ஹர்த்திக்!
இந்நிலையில், இவர்களுக்கு இப்போது லீவு என்பதால், இந்தியா வர முடி செய்தனர். அதற்காக முருகன், கீதா, மற்றும் கீதாவின் அம்மா பிரிட்டோ குயின் ஆகியோர் குழந்தையுடன் ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னைக்கு வருவதற்காக ஃபிளைட்டில் ஏறினர்.
கொஞ்ச நேரத்தில் கீதா குழந்தைக்கு ஃபிளைட்டிலேயே பாலூட்டி உள்ளார். பிறகு தன் மடியிலேயே படுக்க வைத்து தூங்க வைத்துள்ளார். குழந்தையும் நன்றாக தூங்கிவிடவும், அவனை யாரும் எழுப்பவில்லை. நள்ளிரவு சென்னை ஏர்போர்ட்டும் வந்து சேர்ந்தனர்.
ஆனால், அப்போதும் குழந்தை தூக்கத்தில் இருந்து எழவில்லை என்பதால், எழுப்பி பார்த்தனர்.. அப்போதும் எழவில்லை... அதனால் பதட்டமடைந்த பெற்றோர், ஏர்போர்ட்டில் உள்ள மருத்துவ சேவை மையத்துக்கு தூக்கி சென்றனர். அங்கு பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், "குழந்தை இறந்து 2 மணி நேரமாச்சே..ம்மா.. உடம்பெல்லாம் ஜில்லுன்னு ஆயிடுச்சே" என்று சொன்னார்கள்.
இதை கேட்டதுமே சக்திமுருகனுக்கும் கீதாவுக்கும் ஏர்போர்ட்டிலேயே கதறி அழுதனர். உடனடியாக விமான நிலைய போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த அவர்கள் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பான விசாரணையும் நடத்தினர். பால் குடித்தபிறகு குழந்தை கண் விழிக்கவில்லை என்பதால், அநேகமாக மூச்சு திணறி இறந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். எனினும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் எதுவும் தெரியும் என்கிறார்கள் போலீஸார்.