31 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரக் காற்று.. நளினி உட்பட 6 பேரும் விடுதலை.. நேரில் சென்ற பேரறிவாளன்!
சென்னை : உச்சநீதிமன்ற உத்தரவு நகல் சிறை கண்காணிப்பாளருக்கு கிடைத்த நிலையில், 31 ஆண்டு கால சிறை வாசத்திற்குப் பிறகு நளினி, வேலூர் சிறையிலிருந்து சற்று முன்பு விடுதலை செய்யப்பட்டார்.
உச்ச நீதிமன்றம் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 6 பேரையும் விடுதலை செய்து நேற்று தீர்ப்பளித்த நிலையில், விடுதலை தொடர்பான உத்தரவு நகல் சிறைத்துறைக்கு கிடைக்கவில்லை என்பதால் அவர்களை விடுதலை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட சிறைகளின் அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவு நகல் கிடைக்கப்பெற்றுள்ளது. இதையடுத்து நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி, சாந்தன் உள்பட 6 பேர் விடுதலை - யார் இவர்கள்?
ராஜீவ் வழக்கு கைதிகள்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் தொடர்பாக பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு பேரறிவாளன் உள்ளிட்ட நான்கு பேரின் கருணை மனு மீது ஜனாதிபதி எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. பின்னர் தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் 2016ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் கடந்த மே மாதம் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது.
விடுதலை தீர்ப்பு
உச்ச நீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 6 பேரும் தங்களையும் சிறையில் இருந்து விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகார சட்டத்தை பயன்டுத்தி நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரும் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பளித்தது.
விடுதலை தாமதம்?
30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரும் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலையாக உள்ளனர். நளினி வேலூர் பெண்கள் சிறையிலும், முருகன் சாந்தன், ரவிச்சந்திரன் ஆகியோர் ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தனர். ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் புழல் சிறையில் உள்ளனர். இந்த 6 பேரும் இன்று விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் விடுதலை செய்யப்படுவதில் தாமதம் ஏற்படும் எனத் தகவல் வெளியானது.
உத்தரவு நகல்
வேலூர் மத்திய பெண்கள் சிறையில் இருந்து வந்த நளினி கடந்த 10 மாதங்களாகவே பரோலில் இருந்து வருகிறார். அவர் இன்று வேலூர் சிறைக்குச் சென்று தனது பரோலை ரத்து செய்யக்கோரி கடிதம் அளித்தார். ஆனால், விடுதலை தொடர்பான நீதிமன்ற உத்தரவு நகல் தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றும், அது கிடைத்தால் தான் விடுதலை செய்ய முடியும் என்றும் வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் தெரிவித்தார். அதேபோல, புழல் சிறையில் உள்ளவர்களின் விடுதலை உத்தரவு நகலும் புழல் சிறை கண்காணிப்பாளருக்கு கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது.
6 பேரும் விடுதலை
இன்று உத்தரவு நகல் கிடைக்காவிட்டால் திங்கட்கிழமை தான் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தகவல் வெளியானது. இந்நிலையில், சற்று முன்னர் 6 பேரின் விடுதலை பற்றிய உச்ச நீதிமன்ற உத்தரவு நகல் சம்பந்தப்பட்ட சிறைகளுக்கு கிடைக்கப்பெற்றது. அதன் அடிப்படையில் நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பரோலில் இருந்த நளினியை சிறைக்கு அழைத்துச் சென்று, விடுதலைக்கான நடைமுறைகளை செயல்படுத்தியது சிறைத்துறை. பின்னர் வேலூர் மத்திய சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தார் நளினி.
நேரில் சென்ற பேரறிவாளன்
அதேபோல, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ரவிச்சந்திரன், முருகன், சாந்தன் ஆகியோரும் விடுவிக்கப்பட்டனர். ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இருவரையும் பேரறிவாளன் நேரில் சென்று வரவேற்றார். சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய மூன்று பேரும், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள அகதிகள் சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட உள்ளனர்.