பெட் இல்லை, டாக்டர்கள் பத்தலை.. கைவிரித்த 60 தனியார் ஆஸ்பத்திரிகள்.. மக்கள் எங்கு போவது.. ஷாக் தகவல்
60 தனியார் ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதி இல்லை என்ற பகீர் தகவல் வெளியாகி உள்ளது
சென்னை: அதிர்ச்சியாக இருக்கிறது இந்தத் தகவல்களைப் படிக்கும்போது. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்க 60 தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து மறுத்து வருகின்றனவாம். இதனால் தமிழக மக்களுக்காக பாடுபட்டு வரும் அரசின் அயராத முயற்சிகளுக்கு பாதிப்பு வரும் போலத் தெரிகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை அரசு மருத்துவமனைகள்தான் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்காக கடுமையாக உழைத்து வருகின்றன. கொரோனோவுக்கு எதிரான போரில் தமிழக அரசின் பங்களிப்பு மிகப் பெரியது, பாராட்டுக்குரியதாக உள்ளது. அந்த அளவுக்கு முதல்வர் முதல் அதிகாரிகள் வரை தீவிரமாக போராடிக் கொண்டுள்ளனர்.
ஆனால் தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்பு இதில் மிகப் பெரும் ஏமாற்றத்துக்குரியதாக உள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி சுட்டிக் காட்டுவதாக உள்ளது. இது அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது.
தமிழகம்
இதுதொடர்பாக அது வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழகத்தைப் பொருத்தவரை 208 தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோய் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் அதில் 60 மருத்துவமனைகளில் ஒரு நோயாளி கூட இதுவரை சேர்க்கப்படவில்லை. காரணம், அந்த மருத்துவமனைகள் நோயாளிகளை சேர்க்க முன்வரவில்லை என்பதே.
அதிர்ச்சி
இந்த மருத்துவமனைகள் பெரும்பாலும் கள்ளக்குறிச்சி, நாமக்கல், திண்டுக்கல், தஞ்சாவூர் மாவட்டங்களில் அமைந்துள்ளன. இவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டால் அவர்கள் சரிவர பதில் சொல்லவில்லை. 2ம் மற்றும் 3 ம் நிலை நகரங்களில்தான் இந்த அவல நிலை உள்ளதால் அனைத்துத் தரப்புமே அதிர்ச்சியடைந்துள்ளன.
வார்டுகள்
இந்த மருத்துவமனை நிர்வாகிகளிடம் கேட்டபோது தனிப்பட்ட வார்டுகளை அமைப்பதில் சிரமம் உள்ளதாகவும், போதிய டாக்டர்கள், பணியாளர்கள் இல்லை என்றும் உப்புச் சப்பில்லாத காரணங்களைக் கூறியுள்ளனர். சிலர் சோதனை கருவிகள் இல்லை என்றும் கூறியுள்ளனர். தங்களிடம் வரும் நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பதாக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஒரு மருத்துவமனை பிரதிநிதி கூறியுள்ளார்.
படுக்கைகள்
அதேபோல இன்னொரு கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையிடம் விசாரித்தபோது எத்தனை படுக்கைகள் காலியாக உள்ளது என்பதைக் கூற மறுத்து விட்டனர். மேலும் எத்தனை நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற விவரத்தையும் அவர்கள் கொடுக்க மறுத்துள்ளனர். யாருக்கு சிகிச்சை தர வேண்டும், எங்கு தர வேண்டும் என்பதை எங்களது டாக்டர்கள்தான் முடிவு செய்வர் என்றும் தெனாவெட்டாக பதிலளித்துள்ளனர்.
நோயாளிகள்
இதேபோலத்தான் மற்ற மருத்துவமனைகளிலும் பதில் வந்தது. கிட்டத்தட்ட 60 மருத்துவமனைகள் இது போல சாக்கு போக்கு சொல்லி நோயாளிகளை ஏற்க மறுத்து நிராகரித்து வருவது அதிர்ச்சி தருவதாக உள்ளது. ஒரு சில மருத்துவமனைகளில் வசதியைப் பெருக்கிக் கொண்டு நோயாளிகளை சேர்ப்போம் எனக் கூறியுள்ளனர். திண்டுக்கலில் உள்ள மருத்துவமனைகள் நோயாளிகளைச் சேர்க்க மறுப்பதால் நோயாளிகள் கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்குப் போக வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாம்.
சுகாதார துறை
கோவையில் உள்ள பிஎஸ்ஜி மருத்துவமனையில் அதிக அளவிலான கொரோனா நோயாளிகளை சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சியிலிருந்து மட்டும் 150 நோயாளிகள் இங்கு அட்மிட் ஆகியுள்ளனராம். இதுதொடர்பாக மாநில சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் கூறுகையில், நோயாளிகளை அனுமதிக்காத மருத்துவமனைகளை நாங்கள் பட்டியலிலிருந்து நீக்கி வருகிறோம். அது இன்னும் முடிவடையவில்லை. தொடர்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். யாரும் நோயாளிகளை மறுக்க முடியாது என்றார் அவர்.
விளக்கம்
இந்திய மருத்துவர் சங்கத்தின் தமிழக பிரிவு தலைவர் டாக்டர் சி.என். ராஜா இந்த விவகாரம் குறித்துக் கூறுகையில், அனைத்து தனியார் மருத்துவமனைகளும் அரசுடன் ஒத்துழைத்து வருகின்றன. ஆனால் இந்த மருத்துவமனைகளுக்குப் பிரச்சினை இருக்கிறது. அது சரி செய்யப்பட வேண்டும். பெரிய மருத்துவமனைகள் அனுமதித்து வருகின்றன. ஆனால் சிறிய மருத்துவமனைகளுக்குத்தான் பிரச்சினைகள் உள்ளன. ஆள் பற்றாக்குறை, கூடுதல் செலவீனம் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளன என்றார்.
யோசியுங்கள்
என்ன இருந்தால் என்ன.. நம்பிக்கையுடன் வரும் நோயாளிகளை நிராகரிப்பது தவறல்லவா.. உயிர் காக்கும் டாக்டர்களே இப்படி நிராகரித்தால் நோயாளிகள் என்ன ஆவார்கள், எங்கு போவார்கள்.. யோசிங்க மருத்துவமனைகளே.