ஊரடங்கில் குடும்ப வன்முறையை தடுக்க தொலைபேசி எண்கள்.. இதுவரை 616 புகார்கள்.. தமிழக அரசு தகவல்
சென்னை : ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக 616 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள தமிழக அரசு குடும்ப வன்முறையை தடுக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது..
ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் அதைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் நீதிபதி அனிதாசுமந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது..
அப்போது தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபால், ஆஜராகி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.. அதில் குடும்ப வன்முறை புகார்கள் தொடர்பாக மாவட்டம்தோறும் சமூகநலத்துறை தினந்தோறும் அறிக்கை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 616 புகார்கள் வந்துள்ளதாகவும், கிராமங்களில் பாதிக்கப்பட்டவர்கள் சம்மந்தப்பட்ட அங்கன்வாடி ஊழியர் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்களுக்கு, உடனடியாக கவுன்சிலிங் வழங்கப்படுகிறது என்றும், சட்ட உதவி அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் செங்கோட்டையனுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு.. 10-ம்வகுப்பு தேர்வை ஜூலையில் நடத்தக் கோரிக்கை
பாதிக்கப்பட்ட பெண்களை சமூக நலத்துறை மூலம் செயல்படும் சேவை இல்லங்கங்கள், விடுதிகளில் தங்க வைக்கப்படுவதாகவும், குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை அடுத்த மாதம் ஐந்தாம் ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.