சென்னையில் 661 பேருக்கு கொரோனா அறிகுறி.. வீடு வீடான சோதனையில் கண்டுபிடிப்பு.. கண்காணிப்பு தீவிரம்
சென்னை: சென்னையில் 661 பேருக்கு கொரோனா பாதிப்பு அறிகுறி இருப்பதாகவும், அவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள், சென்னையில், நேரடியாகவே சென்று 10 லட்சம் வீடுகளுக்கு மேல் ஆய்வு நடத்தி வருகிறார்கள். இதில், 1973 பேருக்கு உடல் சோர்வு ஏற்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.
1312 பேருக்கு சாதாரண பிரச்சனைதான் என்றும், ஆனால், 661 பேருக்கு காய்ச்சல் இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளன என்றும் தெரியவந்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் இவ்வாறான நோயாளிகளாக உள்ளனர்.
இவர்கள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறிவிட முடியாது. ஆனால், காய்ச்சல் மற்றும் இருமல் போன்றவை இருக்கின்றன, இது சாதாரண பிரச்சனையாக கூட இருக்கலாம். இருப்பினும் அவர்கள் வீட்டுக்குள்ளேயே வைத்து கண்காணித்து வருகிறார்கள்.
மூச்சு திணறல் உள்ளிட்டவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஈரோட்டை சேர்ந்த 26 வயது இளைஞர் கடந்த மாதம் 22ஆம் தேதி துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் சிறந்த முறையில் சிகிச்சை அளித்து அவரை கொரோனா பாதிப்பிலிருந்து, மீட்டனர். பொது மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட போது மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர், கைதட்டி உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.
எனவே சென்னை மக்களும், தங்களது உடல்நிலை குறித்த உண்மைத் தகவலை மாநகராட்சி அதிகாரிகளிடம் பகிர்ந்து கொண்டு காப்பாற்றிக்கொள்ள வலியுறுத்தப்படுகிறார்கள்.