தமிழகத்தில் இன்றும் 688 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,448 ஆக உயர்வு
சென்னை: தமிழகத்தில் இன்று 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,448 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் அதிகமாக நடைபெறுகின்றன. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள்:
தமிழகத்தில் மொத்தம் 63 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன, இதில் 40 அரசு மையங்கள்; 23 தனியார் பரிசோதனை மையங்கள்.
தமிழகத்தில் இன்று மட்டும் 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவர்களில் ஆண்கள் 407; பெண்கள் 281; இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12,448 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் ஆண்கள் 8,054 ; பெண்கள்- 4,391; மூன்றாம் பாலினத்தவர்- 3
இதில் 601 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் இருந்து திரும்பியவர்கள் 49 பேர். கேரளாவில் இருந்து தமிழகம் திரும்பிய ஒருவருக்கும் கொரோனா உறுதியானது. மேலும் துபாயில் இருந்து தமிழகம் திரும்பிய 23 பேருக்கும் கொரோனா உறுதியானது.
தமிழகத்தில் 11 நகரங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தியது
துபாய், குவைத், மலேசியா நாடுகளில் கொரோனா சோதனையில் நெகட்டிவ் என தெரியவந்து தமிழக சோதனையில் 13 பேருக்கு பாசிட்டிவ் என வந்துள்ளது. மாலத்தீவில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா உறுதியானது.
இன்று கொரோனா குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 489. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 4,895.
கொரோனாவால் இன்றும் தமிழகத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் 84 ஆக உயர்ந்துள்ளன. இவ்வாறு தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.