7.5%இட ஒதுக்கீடு மசோதா : அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நனவாக ஆளுநரை சந்தித்த அமைச்சர்கள்
7.5% உள் ஒதுக்கீடு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் தர வலியுறுத்தி தமிழக அமைச்சர்கள் இன்று ராஜ்பவனுக்கு நேரில் சென்று ஐந்து அமைச்சர்கள் ஆளுநரை நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.
சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு தர ஒப்புதல் தருமாறு ஆளுநரை சந்தித்து ஐந்து அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். இட ஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவர்கள் ஆக முடியும் என்பதை ஆளுநரிடம் எடுத்துக்கூறியுள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்கள் சமூகப் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதால், அவர்களைப் பிற மாணவர்களுடன் ஒரே நிலையில் ஒப்பிட்டுத் தேர்வில் வகைப்படுத்துவது என்பது சம நீதிக்கு முரணானது என்பதால் மருத்துவப் படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரை அடிப்படையில் சிறப்புச் சட்டம் இயற்றி ஆளுநர் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சில திருத்தங்கள் கோரி ஆளுநர் அதை திருப்பி அனுப்பினார். பின்னர் அந்தத் திருத்தங்களுடன் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி ஒரு சட்ட முன்வடிவு தமிழக நிறைவேற்றப்பட்டு, சட்ட மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழக அரசு நிறைவேற்றி உள்ள சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், நடப்பாண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டில் சுமார் 300 இடங்கள் கிடைக்கும். இட ஒதுக்கீடு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் தர ஆளுநர் செய்யும் கால தாமதத்தினால் கலந்தாய்வு நடைபெறுவதிலும் கால தாமதம் ஏற்படுகிறது.
நீட் தேர்வு முடிவுகள் அக்டோபர் 16ஆம் தேதி வெளியிடப்பட்டு, மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்குக் கலந்தாய்வு நடத்த தமிழக அரசு காத்திருக்கிறது. இட ஒதுக்கீடு சட்ட மசோதாவிற்கு ஆளுநர் காலம் தாழ்த்தாமல் ஒப்புதல் அளிக்கவேண்டும் என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆளுநர் செய்யும் தாமதத்தினால் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தடைப்படுவதால் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வலியுறுத்தும் விதமாக ஆளுநரைச் சந்திக்க தமிழக அரசின் சார்பில் 5 அமைச்சர்கள் இன்று காலையில் ராஜ்பவனுக்குச் சென்றனர். ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.பி. அன்பழகன், செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் சந்தித்து பேசினர்.
ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள், முதல்வர் அறிவுரைப்படி 7.5 சதவிகித இட ஒதுக்கீடு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் தரக்கோரி ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம். மசோதா ஒப்புதல் தொடர்பாக ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது என்றாலும் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் பயின்ற ஏழை மாணவர்களின் நிலையை எடுத்துக்கூறியிருக்கிறோம்.
இட ஒதுக்கீடு வழங்கினால்தான் அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவராக முடியும். நல்ல முடிவை எடுப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். முடிவு எடுக்க ஆளுநருக்கு காலநிர்ணயம் செய்ய முடியாது எனினும் ஆளுநர் விரைந்து முடிவு எடுப்பார் என்று நம்புகிறோம் எறு அமைச்சர்கள் தெரிவித்தனர்.