தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் செம மழை இருக்கும்.. உருவாகுகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்
சென்னை: தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் அதிகபட்சமாக 6 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவானது.
குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா.. இன்று சூரசம்ஹாரம்.. பக்தர்களுக்கு அனுமதியில்லை
7 மாவட்டங்கள்
இந்த நிலையில் இன்று தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
தென் மாவட்டங்கள்
அதேநேரம், நீலகிரி, கோவை, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அக்டோபர் 27ம் தேதியான நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களில், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானதுவரையிலான மழையும் பெய்யக்கூடும்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
29ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பழையபடி தமிழகத்தில் மழைப் பொழிவு அதிகரிக்கும்.
மழை தொடர்கிறது
வட கிழக்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக ஆரம்பிக்கும் என கூறப்பட்டிருந்தாலும், காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் அவ்வப்போது மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.