6 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு திடீர் நடவடிக்கை
சென்னை: தமிழகத்தில் 6 மாவட்டங்களை சேர்ந்த ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது இதற்கான அறிவிப்பை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ளார்.
தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தமிழகத்தில் 6 மாவட்ட கலெக்டர்கள் உட்பட, மொத்தம் 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி தலைநகர் சென்னை மாவட்ட ஆட்சியராக உள்ள சண்முக சுந்தரம், வேலூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியராக உள்ள ராமன், சேலம் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சியராக உள்ள ரோகிணி, தமிழ்நாடு இசை பல்கலைக்கழக பதிவாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இசை பல்கலைகழக பதிவாளராக இருக்கும் சீதாலட்சுமி, தலைநகர் சென்னைக்கு புதிய மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதே போல திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக உள்ள வினய், அரியலூர் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியராக உள்ள விஜயலட்சுமி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மாநில தேர்தல் ஆணையராக இருந்த டி.எஸ்.ராஜசேகர் மதுரை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.