குட் நியூஸ்.. தமிழ்நாட்டில் 30-வது நாளாக குறைந்த கொரோனா.. 1,000-க்கு கீழ் சென்று கோவையும் ஆறுதல்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 7187 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 182 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து 30-வது நாளாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 1,000 க்கும் கீழ் தினசரி பாதிப்பு குறைந்துள்ளது.
தொடர்ந்து குறையும் கொரோனா
கொரோனாவை தடுக்க தமிழ்நாட்டில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7187 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழப்பு சற்று அதிகரிப்பு
இதனால் மொத்த பாதிப்பு 24,22,497 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 182 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு 14 பேர் இறந்துள்ளனர். கோவையில் அதிகபட்சமாக 17 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 31,197 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 17,043 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 23,21,928 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்
கோவை முதலிடம்
69,372 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,66,862 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 3,03,57,700 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 455 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 3-வது நாளாக பாதிப்பு 500-க்கும் கீழே குறைந்து விட்டது. சென்னையை விட கோவையில் பாதிப்பு தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. ஆனால் கோவையில் ஆயிரத்துக்கும் கீழ் பாதிப்பு குறைந்து ஆறுதல் அளிக்கிறது.
திருவள்ளூரில் குறைவு
கோவையில் மட்டும் 904 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 328 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 114 பேருக்கும், மதுரையில் 151 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 140 பேருக்கும், திருவள்ளூரில் 204 பேருக்கும், திருச்சியில் 263 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 477 பேருக்கும், விருதுநகரில் 112 பேருக்கும், ஈரோட்டில் 870 பேருக்கும், சேலத்தில் 517 பேருக்கும், நாமக்கல்லில் 327 பேருக்கும், தஞ்சாவூரில் 370 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.