தமிழகத்தில் 7316 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை.. சத்ய பிரதா சாஹு
சென்னை: தமிழகத்தில் 7,316 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரசாத் சாஹு தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் தேதியை நேற்று மாலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் லோக்சபா தேர்தலையொட்டி மது விலக்கு அமலாக்கத்துறை மற்றும் வருமான துறை அதிகாரிகளோடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு ஆலோசனை நடத்தினார்.
மது விற்பனை குறித்து நாள்தோறும் விவரங்களை தெரிவிக்க வேண்டும், ஒரு தாசில்தார், 3 அல்லது 4 காவல்துறையினர், துணை ராணுவத்தை சேர்ந்த ஒருவர், உதவியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோர் அடங்கிய தேர்தல் பறக்கும் படை அமைக்க வேண்டும், நிலையான கண்காணிப்பு படையிலும் இதே எண்ணிக்கையில் அலுவலர்கள் இருப்பார்கள் என்று இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 67,664 வாக்குச் சாவடிகளில் 7,316 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. தேர்தல் நாளன்று காலை 7 மணி முதல் 5 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரசாத் சாஹு தெரிவித்தார்.