தமிழகத்தில் கொரோனாவால் 738 பேர் பாதிக்கப்பட்டாலும் நல்ல செய்தியை கூறிய பீலா ராஜேஷ்
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் 738 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் செய்தியை தெரிவித்தார் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்த நிலையில் கடந்த சில தினங்கள் இரட்டை இலக்கங்கள், மூன்று இலக்கங்கள் என அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.
நேற்று முன் தினம் வரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 690 பேராக இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.
குணமடைந்தவர்கள்
அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 48 பேரில் 42 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்றிருந்தனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 21 பேர் குணமடைந்துள்ளனர் என்றார். அத்துடன் செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக் கொள்ளும் விதமாக தேங்க்யூ சொன்ன பீலா, உடனே திரும்ப வந்து ஒரு செய்தியை கூறினார்.
நம்பிக்கையூட்டும் செய்தி
இந்த நேரத்திலும் ஒரு மகிழ்ச்சியான நம்பிக்கையூட்டும் செய்தி உள்ளது. அதாவது 74 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார் என்றார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 26-ஆம் தேதி சென்னை மீனம்பாக்கம் அருகே உள்ள பொழிச்சலூரைச் சேர்ந்த 74 வயது மூதாட்டி கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டார்.
மலர் கொத்து
அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து மருத்துவக் குழுவினரால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவருக்கு ஏற்கெனவே ரத்த அழுத்தம், கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோய் இருந்தது. எனினும் இவர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினார். அவருக்கு மருத்துவர்கள் மலர் கொத்துகளையும் பழங்களையும் கொடுத்து வழி அனுப்பினர்.
மூதாட்டி
பொதுவாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர், இறப்போர் பட்டியலை எடுத்து பார்த்தோமேயானால் அதில் பெரும்பாலானோர் 60 வயதை கடந்தவர்களாகவே இருக்கின்றனர். எனவே 60 வயது மேற்பட்டோருக்கு கொரோனா வந்தால் இறப்பு நிச்சயம் என்ற நம்பிக்கையை இந்த மூதாட்டி உடைத்துள்ளார். அவர் உடல்நலத்துடன் வாழ நாமும் வாழ்த்துவோம்.