தமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு.. மொத்த எண்ணிக்கை 309ஆக உயர்வு
சென்னை: தமிழகத்தில் இன்று 75 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
இன்று மாலை நிருபர்களிடம் பேட்டியளித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் புதிதாக இன்று, 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். மற்றொருவர் சென்னையை சேர்ந்தவர். அவரும் இன்னொருவரிடம் தொடர்பில் இருந்தவர்தான். தமிழகத்தில் 309 பாசிட்டிவ் உறுதியாகியுள்ளது. இதுவரை, 86 ஆயிரத்து 342 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி மாநாட்டில் 1103 பேர் பங்கேற்றனர். அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை, டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில், 264 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோயாளிகள் வசிக்கும் பகுதியை சுற்றி 8 கி.மீ கன்டெய்ன்மென்ட் செய்யப்பட்டுள்ளது. 4585 பணியாளர்கள் கண்டைன்மெண்ட் திட்டத்தில் செயல்பட்டு வருகிறார்கள்.
தற்போது நோயாளிகள் எண்ணிக்கையில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இது மாறக்கூடிய எண்ணிக்கைதான். இவ்வாறு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்