"இதோ.. நானும் வருகிறேன் தோழா".. நண்பனை சந்திக்க கிளம்பி சென்ற அன்பழகன்.. இரு நண்பர்களின் கதை இது!
மறைந்த தலைவர்கள் கருணாநிதி - அன்பழகனின் நட்பு ஆழமானது
சென்னை: கலைஞர் கருணாநிதி - பேராசிரியர் அன்பழகன் = இவர்களின் நட்பு அபாரமானது.. மலைக்கத்தக்கது... இவர்களுக்குள் அப்படி என்ன ஒரு நெருக்கம்? ஏன் இணக்கம்? ஏன் உருக்கம்?!!!
Recommended Video
2 பேரும் பிறந்தது ஒரே மாவட்டம்தான்.. பேரறிஞர் அண்ணா 'பேராசிரியர் தம்பி' என என்று அழைத்தார்... "எனக்கு அக்காள் உண்டு.. ஆனால் அண்ணன் இல்லை... பேராசிரியர்தான் என் அண்ணன் என்றார் கருணாநிதி.. ஆனால் அன்பழகன் தன்னை அறிமுகப்படுத்தி கொள்வது எப்படி தெரியுமா? முதலில் நான் மனிதன், 2-வது நான் அன்பழகன், 3-வது நான் சுயமரியாதைக்காரன், 3-வதுஅண்ணாவின் தம்பி, 5-வது கலைஞரின் தோழன் என்றே சொல்வார்.
அண்ணாவின் மறைவுக்கு பிறகு நாவலர் அணி, கருணாநிதி என 2 அணிகள் உருவாயின.. எந்த அணிக்கும் ஆதரவு தராமல் அன்பழகன் தனித்து நின்றார்.. ஒரு கட்டத்தில் நாவலர்தான் கட்சியின் தலைமை பொறுப்பிற்கு சரியானவர் என்று சொல்ல, ஆனால் அன்பழகனோ கருணாநிதியின் தலைமையை ஏற்றார்..
"பேராசிரியர் எங்கே".. அன்றே நண்பனை தேடிய கருணாநிதி.. இதோ இன்று புறப்பட்டு விட்டார் அன்பழகன்!
சோதனை
திமுகவின் சோதனையான காலக்கட்டம் என்றால் 1975 காலக்கட்டத்தை சொல்லலாம்.. கருணாநிதியை பலரும் ஒதுக்கிவிட்டு சென்றனர்.. பாராமுகம் தொடர்ந்தது.. மனதளவில் இடிந்து போனார்... அந்த சமயத்தில் கருணாநிதி எந்த பக்கம் திரும்பினாலும் பேராசிரியர் மட்டுமே தன்னை நம்பிக்கையுடன் உற்று நோக்கி நின்று கொண்டிருப்பதை உணர்ந்தார்... இதுதான்.. இது ஒன்றுதான் திமுகவில் கருணாநிதிக்கு அடுத்த இடத்தில் மதிப்புடன் வைக்கப்பட காரணமாயிற்று.
காரல் மார்க்ஸ்
எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது திமுக கண்ட வனவாசத்தின்போதும் சரி, எமர்ஜென்சி காலத்திலும் சரி, கருணாநிதியின் அருகாமையிலேயே தன் நம்பிக்கை விதையை தூவி கொண்டே இருந்தார் அன்பழகன்.. இதுதான் கருணாநிதியின் இதயத்தில் ஒட்டிக் கொண்டது. "கார்ல் மார்க்ஸுக்கு ஏங்கல்ஸ் போல.. கருணாநிதிக்கு பேராசிரியரும்" என்று முக ஸ்டாலின் ஒருமுறை தெரிவித்திருந்தார்.. இது நூறு சதம் உண்மை.. அப்பாவிடம் பெயர் வாங்குவதை விட பெரியப்பாவிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்ப கஷ்டம் என்று ஸ்டாலின் சொன்னதும் சரியான வார்த்தைகளே.
மரியாதை
மனதில் பட்டதை படக்கென சொல்லிவிடுவார் அன்பழகன்.. சொன்னபடியே செய்துவிடவும் கூடியவர்... அதனால்தான் திமுகவில் அவரது கருத்துக்கு தனி முக்கியத்துவம் கிடைத்தது.. எந்தவொரு சூழலில் அன்பழகனுக்கு எள்ளளவும் மதிப்பு குறையாமல் கருணாநிதி மிக ஜாக்கிரதையாக பார்த்து கொண்டார். அதேசமயம் அவருக்கு உரிய பதவி, சரியான மேடை, தக்க பதவி தந்து.. அதனை திமுகவின் வளர்ச்சிக்கும் திசை திருப்பி கொண்டார்!!
கருணாநிதி
அன்பழகனுக்கு பிறந்த நாள் என்றால் போதும், ஆஸ்பிரின் தோட்டப்பகுதிக்கு விரைந்து சென்று வாழ்த்து சொல்வார் கருணாநிதி.. ஒரு கட்டத்தில் கருணாநிதி வீல்சேர் வாழ்க்கையை சந்திக்க துவங்கியபோது, அன்பழகனே நேரில் வந்து கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்று கொண்டு போவார்.. ஒருவருக்கொருவர் பார்த்தவுடனேயே கைகளை இறுக பற்றிக் கொள்வார்கள்.. எடுத்த எடுப்பிலேயே வார்த்தைகள் விழுவது குறைவுதான்.. காரணம், சில நிமிட ஆழ்ந்த மவுனமும், கைப்பிடி இறுக்கமும் அந்த இடத்தில் நூறு கோடி வார்த்தைகளுடன் அளவாளாவி கொண்டிருக்கும்.
சந்தேகம்
இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் வந்ததே இல்லை. தன்னை விட சிறிய வயதில் ஒருவர் தலைவராக இருக்கிறாரே என்ற எண்ணம் பேராசிரியருக்கும் இறுதிவரை தோன்றவே இல்லை.. யாரேனும் இடையில் புகுந்து இப்படி ஒரு சந்தேகத்தை எழுப்பினாலும் "கட்சித் தலைவருக்கு உரியபடி அவரால் இருக்க முடிகிறது... அதனால் அவரை திமுகவின் தலைவராக ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை" என்று நெத்தியடி பதிலை தந்துவிடுவார் பேராசிரியர்.
இணைப்பு
1979ம் ஆண்டு திமுக நடந்த ஒரு சம்பவம்: அதிமுக - திமுக இணைப்பது பற்றின பேச்சு துவங்கிய காலகட்டம் அது.. கருணாநிதியின் நெருங்கிய நண்பர் பிஜுபட்நாயக் ஒரிசாவில் இருந்து கிளம்பி பேச்சுவார்த்தை நடத்த சென்னை வருகிறார்.. ரொம்ப நேரம் பேசுகிறார்கள்.. இரு திராவிட கட்சிகளும் இணைந்தால், அதற்கு கொடி எப்படி இருக்க வேண்டும், சின்னம் எப்படி இருக்க வேண்டும், முக்கியமாக யார் தலைவராக இருப்பது என்று விவாதங்கள் எப்போதுமே பொறுமை காக்கும் அன்பழகன் அன்று தான் தன் முதலும் - கடைசியுமான கோபத்தை கக்கினார்.. "கருணாநிதி வேண்டுமானால் அதிமுகவுக்கு போகட்டும், அவர் ஒன்றும் திமுகவின் சொத்து இல்லை" என்றார்.. இதை பார்த்து மிரண்டது பிஜுபட்நாயக் அல்ல, கருணாநிதிதான்.. உடனடியாக திமுக இணைப்பு திட்டத்தை கைவிட்டார்.
முத்தம்
3 வருடங்களுக்கு முன்பு ஒருநாள் கருணாநிதியை காண அன்பழகன் சென்றிருந்தார்.. கலைஞர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. திடீரென அன்பழகனின் கையை பிடித்து முத்தம் தந்தார்.. ஏன் தந்தார் என்றும் தெரியவில்லை.. எதை நினைத்து தந்தார் என்றும் தெரியவில்லை.. இத்தனைக்கும் கருணாநிதியால் கையை பிடித்து இழுத்து முத்தம் தரும் அளவுக்கு வலிமை குன்றி இருந்தார்.. அந்த முத்தத்தின் ஈரத்தின் அர்த்தம் ஒருவேளை பேராசிரியருக்கு மட்டும் தெரிந்திருக்கலாம்.. ஆனால் இதுதான் கருணாநிதி, தன் அண்ணனிடம் பாசத்தை பொழிந்த இறுதி தருணம்!
ரோஜாப்பூ
கருணாநிதி மறைந்தவுடன் அவரது இறுதி முகத்தை காண நிலைகுலைந்து போய் அருகில் வந்து நின்றார் பேராசிரியர்.. ஸ்டாலினும் கனிமொழியின் மகன் ஆதித்யாவும் கைத்தாங்கலாக அன்பழகனை அழைத்து வந்தனர்.. வெகுநேரம் கருணாநிதியின் உடலையே பார்த்துநின்றார்.. அங்கிருந்தோரிடமும் எதுவும் பேசவில்லை.. 1942-ல் முதன்முதலாக கருணாநிதியை பார்த்ததுமுதல், வெற்றி, தோல்வி, அவமானம், சிறைவாசம், நெருக்கடிநிலை, கட்சி கண்ட சோதனை.. பதவி போனது, பிள்ளைகளின் திருமணங்கள், பேரன், பேத்திகளின் திருமணங்கள், வீல்சேர் வாழ்வு, படுத்த படுக்கையான இறுதி கட்டங்கள் வரை எத்தனையோ காட்சிகள் பேராசிரியருக்கு அந்தக்கணம் வந்து போயிருக்கவே செய்யும்... ரோஜாப்பூவை கையில் எடுத்து தம்பியின் காலடியில் போட்டார்.. "போய் வா தோழனே" என்று அவரது கடைசி பார்வை அர்த்தங்களை உதிர்த்தது.
கூட்டணி
சில தினங்களுக்கு முன்பு, பேராசிரியர் சீரியஸ் என்ற தகவல் ஆஸ்பத்திரி வட்டாரங்களில் இருந்து வெளிவந்தது.. டாக்டர் ராமதாஸ் முதல், ஜிகே வாசன் வரை துடித்து போய் ஓடிவந்தனர்.. பேராசிரியரையே தீர்க்கமாக உற்று நோக்கியபடி இருந்தார் வாசன்.. இப்போது அதிமுக கூட்டணியில் இருந்தாலும், தனக்கும் பேராசிரியருக்குமான நெருக்கமும், இணக்கமும் அளவிட முடியாதது என்று அங்கிருந்த ஆ.ராசாவிடம் கண்கலங்கியபடி சொன்னார்.. இப்படி ஜிகே வாசன் என்றில்லை.. ஒவ்வொரு தலைவர்களுக்கும் பேராசிரியருடன் துளிர்த்து தழைந்த அந்த உறவுகளை பற்றி நினைவுகூற, வரலாறுகளையும், சரித்திர சம்பவங்களையும், உருக்கும் நிகழ்வுகளையும் ஏராளமாகவே வழங்கிவிட்டு போயுள்ளார் பேராசிரியர்!!
என்றும் அதிசயம்
திமுக மாநாடுகளில் முழங்கிய அந்த கம்பீர குரல் இன்று அடங்கி போய்விட்டது.. தத்துவத்தையும், களப்பணியையும் சரிவிகிதத்தில் பாய்ச்சிய திறன் இன்று ஒடுங்கிவிட்டது.. ஆனால் தூவப்பட்ட லட்சிய விதைகளும்.. கழகத்தை கட்டிக்காக்க கற்பிக்கப்பட்ட எடுப்பான பாடங்களும் என்றும் நிலைத்து நிற்கும்... இன்று கழகத்தின் இமயம் சரிந்தாலும், சீனப் பெருஞ்சுவர் எப்படி இன்று அதிசயமாக நிற்கிறதோ.. அப்படி பேராசிரியரும் திமுகவின் அதிசயமாக விளங்கிகொண்டே இருப்பார்.. தன் பிரம்மாண்டம் இழக்காமல்!!