நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியோடு கனமழை - வானிலை ஜில் செய்தி
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. பிற மாவட்டங்கள் மற்றும் புதுவையிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்குனி மாதத்தில் வெயில் பட்டையை கிளப்பியது. அனல் காற்று அள்ளி வீசி மக்களை வறுத்து எடுத்தது. பெரும்பாலான ஊர்களில் வெயில் 100 டிகிரியை கடந்து பதிவானது.
கரூர், வேலூர், திருத்தணி உள்பட சில இடங்களில் 105 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவானது. சுட்டெரித்த சூரியனின் சூடு தாங்கமுடியாமல் மக்கள் தவித்து போயினர். இந்த நிலையில் கடும் வெயிலுக்கு மத்தியில் தற்போது தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.
மழையால் குளுமை
கடந்த 2 நாட்களாக இவ்வாறு சில இடங்களில் மழை பெய்து கொண்டு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
கனமழை பெய்யும்
செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் புவியரசன், தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 8 மாவட்டங்களில் இடி, மின்னல் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வெள்ளிக்கிழமையும் மழை உண்டு
பிற மாவட்டங்கள் மற்றும் புதுவையிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் 17ஆம் தேதிமுதல் படிப்படியாக மழை குறையும். வெள்ளிக்கிழமையன்று நீலகிரி, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
காற்று வீசும்
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் புவியரசன் கூறியுள்ளார்.