10 மாத குழந்தை உள்பட.. ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50!
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என மாநில சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்த 11 மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர் வசித்த இடங்களை சுற்றி 7 கி.மீ. தூரத்தில் உள்ளவர்களின் வீடுகள் கண்காணிப்பில் கொண்டு வரப்படும்.
காய்ச்சல் அறிகுறிகள்
அவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கிறதா என சோதனை செய்யவுள்ளோம் என நேற்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. அந்த சோதனை இன்று முதல் தொடங்குவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு கொரோனா கன்டெய்ன்மென்ட் டிரைவ் என பெயரிடப்பட்டிருந்தது.
11 மாவட்டங்கள்
இந்த நிலையில் இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் 11 மாவட்டங்களில் வீடு வீடாகச் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோட்டில் 27,725 பேருக்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சேலத்தில் 80 ஆயிரம் பேருக்கும் சென்னையில் ஒரு லட்சம் பேருக்கும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
4 பேர் ஒரே குடும்பத்தினர்
இதில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் 4 பேர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 4 பேர் கோவையை சேர்ந்தவர்கள்.இதில் 4 பேருக்கு ஏற்கெனவே ஈரோட்டில் தாய்லாந்து நாட்டினருடன் இருந்த தொடர்பால் ஏற்பட்டது. மேலும் 4 பேருக்கு தாய்லாந்து நாட்டினர் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டதால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த 8 பேரில் 4 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாவர். இந்த 4 பேரில் ஒரு 10 மாத குழந்தையும் உள்ளது.
43, 538 பேர் தனிமை
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 43,538 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஈரோட்டில் 50 பேருக்கு காய்ச்சல் இருமல் இருந்தது கண்டுபிடித்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க 17 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்படும். போலி பாஸ்போர்ட் மூலம் 10 ஆயிரம் பேர் தமிழகம் வந்துள்ளதாக கூறுவது தவறான செய்தி என்றார் பீலா ராஜேஷ்.