ஓமனிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 8 பேர் கதி என்ன? குடும்பத்தினர் கலக்கம்
சென்னை: ஓமன் நாட்டில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 8 பேர் காணாமல் போயுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் பலரும் ஓமன், கத்தார் உள்ளிட்ட பல வளைகுடா நாடுகளுக்கு சென்று அங்கிருக்கும் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம்.
இதே போன்று, கார்மேகம், காசிலிங்கம், ராமநாதன் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாழை என்ற பகுதியை சேர்ந்த 5 பேரும், கடந்த 14ஆம் தேதி ஓமன் நாட்டின் மசீரா தீவிலிருந்து, மீன் பிடிக்க கிளம்பியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த 3 மீனவர்களும், இதேபோல மீன்பிடிக்க சென்றுள்ளனர். ஆகமொத்தம் இந்த 8 பேரும் இதுவரை தாங்கள் புறப்பட்ட இடத்திற்கு திரும்பவில்லை. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற தகவலும் தெரியவில்லை.
அரபிக்கடலில் ஹிகா புயல் சின்னம் உருவாகி கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. எனவே மீனவர்கள் நிலைமை குறித்து, அவர்களது குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர். தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு மீனவர்களை மீட்டுத்தர வேண்டும் என்று அந்த குடும்பத்தினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.