ஜோலார்பேட்டை தண்ணீர் வந்தாச்சு.. ஜோரா மழையும் பெய்ய போகுதாம்.. மகிழ்ச்சியில் சென்னை!
சென்னை உட்பட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: ஒரு பக்கம் சென்னைக்கு தண்ணீர் வந்து இறங்குகிறது... மற்றொரு பக்கம் சென்னைக்கு மழையே வரப்போகிறதாம்.. சென்னையுடன் சேர்த்து 9 மாவட்டங்களுக்கும் மழை பெய்ய போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு முதலே வறண்டு கிடக்கிறது தமிழகம். குறிப்பாக கடந்த 3 மாதங்களைவிட இந்த மாதம் எவ்வளவோ பரவாயில்லை. தண்ணீர் பஞ்சத்தால், ஆங்காங்கே வெட்டு குத்து, கொலையெல்லாம் நடந்தது.
ஆனால் இந்த சமயத்தில் தமிழக அரசியல் கட்சிகள் எல்லாருமே தங்களால் முடிந்த குடிநீர் விநியோகத்தை தமிழகம் முழுக்க செய்து மக்களுக்கு கொஞ்சம் நிம்மதி தந்தார்கள்.
வேலூரை பிடிச்சே ஆகணும்.. படு தீவிரத்தில் அதிமுக .. அதிரடி நடவடிக்கைகள் ஸ்டார்ட்!
வெயில்
இதனிடையே அவ்வப்போது ஒரு சில மாவட்டங்களில் பெய்த மழை சொல்லி கொள்கிற மாதிரி அமையவில்லை. இப்போதைக்கு வெயில் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறதே தவிர, பெரிய மழை வரவில்லை.
அறிவிப்பு
இந்நிலையில், அடுத்த 3 நாட்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுதொடர்பாக ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளது.
3 காரணங்கள்
அதில், "வெப்பச்சலனம் காரணமாகவும், தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும், தென் தமிழக கடலோரப் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்களில், லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
9 மாவட்டங்கள்
குறிப்பாக, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.