ஜெ.சமாதியில் மரியாதை செலுத்த 9 எம்எல்ஏக்கள் தடுக்கப்பட்டனரா? திண்டுக்கல் சீனிவாசன் பரபர விளக்கம்!
சென்னை: ஜெயலலிதா சமாதியில் 9 எம்எல்ஏக்களை மரியாதை செலுத்த விடாமல் தடுத்ததாக ராஜன் செல்லப்பா கூறியது குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.
அதிமுக எம்எல்ஏவான ராஜன் செல்லப்பா கட்சி நிர்வாகம் குறித்து இன்று கூறிய கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கட்சிக்கு ஒரே தலைமை வேண்டும் என்றும், அதிமுகவில் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை என்றும் ராஜன் செல்லப்பா கூறினார்.
மேலும் தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமாருடன் 9 எம்எல்ஏக்கள் ஜெயலலிதா சமாதிக்கு செல்லாதது ஏன்? 9 எம்எல்ஏக்களை ரவீந்திரநாத்துடன் ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியது யார்? என்றும் ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பினார்.
ராஜன் செல்லப்பாவின் கருத்து அ.தி.மு.க.வில் சலசலப்பை உருவாக்கும்... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அவரது இந்த பேச்சு அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே ஒற்றுமை இல்லை என்பதை காட்டுவதாகவும் உட்கட்சி பூசலை உறுதிப்படுத்துவதாகவும் உள்ளது என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் ராஜன் செல்லப்பாவின் பேச்சு குறித்தும் குற்றச்சாட்டு குறித்தும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரட்டை தலைமையில் அதிமுக ஆளுமையுடன் உள்ளது என்றார்.
மேலும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த, இடைத்தேர்தலில் வென்ற 9 எம்எல்ஏக்களை தடுத்ததாக ராஜன் செல்லப்பா கூறுவது பொய்யானது என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.