நல்ல செய்தி.. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நுரையீரல் தொற்றிலிருந்து குணமடைந்த 98 சதவீதம் பேர்!
சென்னை: சென்னை அரசு ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனா மையத்தில் இருந்த 98 சதவீதம் பேர் நுரையீரல் தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டனர்.
இதுதொடர்பாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கடந்த 1ம் தேதி கொரோனாவிற்கு பிந்தைய தொடர் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது.
இந்த மையத்தில் உடல் பருமன் பரிசோதனை, மூச்சு திறனாய்வு, நடைபயிற்சி, சிடி ஸ்கேன், தானியங்கி முதல் ரத்த பரிசோதனை, இயன்முறை பயிற்சி, கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் செய்யப்படுகின்றன.
ஆலோசனை
இதன் முடிவில் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது. தற்போது வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 150 பேருக்கு மீண்டும் சிடி ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டதில் 98 சதவீதம் பேர் நுரையீரல் தொற்றில் இருந்து முழுவதும் குணமடைந்தது தெரியவந்துள்ளது.
நுரையீரல்
கொரோனா தொற்று இருப்பவர்களுக்கு நுரையீரலில் ஏற்படும் தொற்றால்தான் அவர்கள் மரணிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவேதான் கொரோனா தொற்று இருக்கும் நபர்களுக்கு முதலில் நுரையீரல் மீது கவனம் செலுத்தப்படுகிறது. நுரையீரலில் உள்ள தொற்றை கவனமாக நீக்கிவிட்டாலே கொரோனா குறித்த கவலையே வேண்டாம்.
சிகிச்சை
காய்ச்சல், சளியை சித்த மருத்துவம், மருந்து மாத்திரைகளால் குணப்படுத்திக் கொள்ளலாம். அது போல் கெட்டியான சளியை கரைப்பதற்கான சிகிச்சைகளும் உள்ளன. அதையும் செய்யலாம். மேலும் யோகாசனங்களும் அரசு யோகா மருத்துவர்களால் பயிற்றுவிக்கப்படுகின்றன.
6 மாதங்கள்
இதை கொண்டு நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ளலாம். மேலும் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்தாலும் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்காவது நாம் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.