சென்னையில் 99.9% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டார்கள்.. முதன்மை கல்வி அலுவலர் தகவல்
சென்னை: சென்னையில் சுமார் 100% ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பிவிட்டதாக சென்னை முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி தெரிவித்தார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ ஊழியர் அமைப்பினர் தமிழகம் முழுக்க போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசிரியர்களும் இந்த போராட்டத்தில் குதித்துள்ளதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி இன்று காலை, நிருபர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது: சென்னையில் 99.9% ஆசிரியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பிவிட்டனர்.
போராட்டம் நடந்த காலகட்டத்தில் கூட, பள்ளிகளை மூடும் அளவுக்கு நிலைமை போகவில்லை. அனைத்து பள்ளிகளும் இயங்கியபடிதான் இருந்தன. இப்போது மேலும் இயல்பான நிலைமைக்கு பள்ளிகள் திரும்பிவிட்டன.
ஆசிரியர்கள் வருகை நிலவரம் பற்றி, பள்ளிகளில் இருந்து இன்று காலை 9 மணிமுதல் எங்களுக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்து வருகின்றனர். ஆசிரியர்கள் வருகை தந்து கையெழுத்திடுவதை கொண்டு நாங்கள் இந்த புள்ளிவிபர கணக்கிற்கு வந்துள்ளோம்.
பள்ளிக்கு வருகை தராத 4 ஆசிரியர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பிறகு அவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்படுவார்கள். இப்போது பணியாற்றிய அதே பள்ளியில் அவர்களுக்கு பணியிடம் கொடுக்கப்படாது. சென்னையை பொறுத்த அளவில் கிட்டத்தட்ட நூறு சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டதால் செய்முறைத் தேர்வுகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது.