சிறுவன் விஷாக் தம்பிக்கு எனது அன்பார்ந்த நன்றி.. முதல்வர் எடப்பாடியை நெகிழவைத்த 4ம் வகுப்பு மாணவன்
சென்னை: சேமித்து வைத்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பிய திருப்பூரைச் சேர்ந்த 4ம் வகுப்பு மாணவனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெகுவாக பாராட்டி உள்ளார்.
தொற்றால் ஏழை எளிய மக்கள் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய இன்னல்களிலிருந்து அவர்களை விடுவிக்கவும், தடுப்பு நடவடிக்கைகளுக்கும், மனம் உவந்து மக்கள் தங்கள் பங்களிப்பினை அளிக்க வேண்டும் என்று தமிழக மக்களுக்கு கோரிக்கை வைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மார்ச் 27ம் தேதி கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று தங்களிடம் உள்ள 100 ரூபாயை கூட கொரோனா நிவாரண நிதியாக மக்கள் அனுப்பி வருகிறார்கள். இதுவரை ஏராளமான மக்கள் தாங்களாக முன்வந்து நிவாரண தொகையை அனுப்பி வருகிறார்கள்.
அந்த வகையில் திருப்பூரைச் சேர்ந்த விஷாக் என்ற 4ம் வகுப்பு படிக்கும் மாணவன் தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்து முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இது தொடர்பாக அந்த மாணவன் முதல்வருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம், எனது பெயர் வி.பி. விஷ்வாக் . திருப்பூர் காந்தி நகரில் உள்ள ஏவிபி பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறேன். கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்க நான் சேமித்து வைத்திருந்த ரூ.150 பணத்தை எனது தந்தை வங்கி கணக்கில் இருந்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளேன். தமிழக மக்கள் அனைவரும் விரைவில் இயல்பு நிலைக்கு வர வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டுகிறேன் " இவ்வாறு அந்த மாணவன் கடந்த 9ம் தேதி கடிதம் அனுப்பி உள்ளான்.
கொரோனா நிவாரணத்திற்காக தான் சேமித்து வைத்திருந்த தொகையை தங்கள் மகன் நிதியுதவியாக அளித்திருப்பது நெகிழ்ச்சி அளிக்கிறது.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 10, 2020
இச்சிறுவயதிலேயே சேமிக்கும் பழக்கமும் நாட்டிற்கு உதவும் உயர்ந்த எண்ணமும் கொண்ட சிறுவன் விஷாக் தம்பிக்கு எனது அன்பார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கவும் https://t.co/zkaDFzktrk
அந்த கடிதத்தையும், பணம் அனுப்பியதற்கான ரசீதையும் அவரது தந்தை பிரசாத் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் டுவிட்டர் பக்கத்தை டேக் செய்து குறிப்பிட்டிருந்தார். இதை பார்தத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறுவனை "வெகுவாக பாராட்டி உள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனா நிவாரணத்திற்காக தான் சேமித்து வைத்திருந்த தொகையை தங்கள் மகன் நிதியுதவியாக அளித்திருப்பது நெகிழ்ச்சி அளிக்கிறது. இச்சிறுவயதிலேயே சேமிக்கும் பழக்கமும் நாட்டிற்கு உதவும் உயர்ந்த எண்ணமும் கொண்ட சிறுவன் விஷாக் தம்பிக்கு எனது அன்பார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கவும்" என்று பதிவிட்டுள்ளார்.