50 சதவீத விலை குறைப்பு.. குவிந்த மக்கள்.. திறப்பு விழா அன்றே மூடுவிழா கண்ட பிரியாணி கடை!
சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக பிரியாணி கடை ஒன்று திறப்பு விழா அன்றே மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தில் சென்று வருகிறது. தினசரி பாதிப்பு 10,000-ஐ நெருங்கி விட்டது.
இதனால் தமிழத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வருகிற 20-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடைகள், வணிக நிறுவங்களின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக பிரியாணி கடை ஒன்று திறப்பு விழா அன்றே மூடப்பட்டுள்ளது. சென்னை வேளச்சேரியில் 'தி வெட்டிங் பிரியாணி' என்ற பெயரில் பிரியாணி கடை இன்று புதிதாக திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக பிரியாணிக்கு 50 சதவீத விலை தள்ளுபடி அறிவித்திருந்தனர். இதனை அறிந்த பொதுமக்கள் காலை முதலே சாரை, சாரையாக கடையின் முன்பு குவிந்தனர். மக்கள் கூட்டம் அதிகரித்ததால் மாநகராட்சி அதிகாரிகள் வந்து கடையை மூடும்படி அறிவுறுத்தினர்.
அப்போது பொதுமக்கள் தேர்தல் நேரத்தில் கொரோனா பரவவில்லையா? அப்போது மட்டும் கூட்டமாக, கூட்டமாக பிரசாரத்துக்கு வந்தனர். அப்போது பரவாத கொரோனா இப்போது மட்டும் பரவுமா? என்று அதிகாரிகளுடன் வாக்கு வாதம் செய்தனர். மாநகராட்சி அதிகாரிகள் கடைக்கு அரை மணி நேரம் அனுமதி வழங்கினர். அதற்குள் பில் வாங்கிய நபர்களுக்கு பிரியாணி கொடுத்துவிடும் படி கூறினர். பின்னர் கடைக்கு சீல் வைத்தனர்.