தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி வழக்கு
சென்னை: தனியார் மருத்துவமனைகளில், கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா சிகிச்சை பெற 22 அரசு மருத்துவமனைகளை அங்கீகரித்து தமிழக அரசு, உத்தரவிட்டது. தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து, 112 தனியார் மருத்துவமனைகளையும், கொரோனா சிகிச்சை பெறும் மருத்துவமனைகளாக அறிவித்த தமிழக அரசு, விருப்பப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
தனியார் மருத்துவமனைகளில் கொரனோ பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்த, 4,500 ரூபா கட்டணத்துக்கும் அதிகமாக 6,000 முதல் 8,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகவும், சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுவது கூறி வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
தனியார் மருத்துவமனைகளில், கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுபவர்களுக்கு முழு உடல் கவசத்திற்கு பத்தாயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும், வெண்டிலட்டர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வீதமும் 5 ஆயிரம் ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை அறை வாடகையாக வசூலிக்கப்படுவதாகவும் மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.
ஏழுபேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய அரசு, உறவினர்களிடம் பேச அனுமதி மறுப்பது ஏன்?
மஹாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களில் கொரோனா சிகிச்சை வழங்க, தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்துள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க, கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.