தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றத்துக்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் பரபரப்பு வழக்கு
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது தானா என்பது குறித்த விசாரணைக்காக வழக்கை பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில் ரமானி, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி தகில் ரமானி, தனது பதவியை ராஜினாமா செய்து குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பினார். அதைத் தொடர்ந்து அவர் நீதிமன்ற விசாரணைகளில் பங்கெடுக்கவில்லை.
இந்த பின்னணியில் தஹில் ரமானியின் இடமாற்ற பரிந்துரைக்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டவர் மற்றொரு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வது அனுமதிக்கப்பட்டதா?
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் பணி மாற்ற முடிவு குடியரசுத் தலைவரால் மேற்கொள்ளப்படுகிறது அல்லது உச்சநீதிமன்ற கொலிஜியத்தால் மேற்கொள்ளப்படுகிறதா?
விக்ரம் லேண்டருக்கு என்னாச்சு.. எப்படியிருக்கு.. விரைவில் பரபரப்பு அறிக்கையை வெளியிடும் இஸ்ரோ
தலைமை நீதிபதி ஒப்புதல் அளிக்காவிட்டாலும் இடமாற்றம் செய்ய முடியுமா?
பணி ஓய்வு பெறவுள்ள நிலையில் தலைமை நீதிபதியை பணி மாற்றம் செய்ய முடியுமா? என்பன உள்ளிட்ட கேள்விகளை மனுதாரர் எழுப்பியுள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்ள கோரி, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பிரபாகரன், நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் முறையிட்டார்.அதற்கு, உச்ச நீதிமன்றத்தை நாடாமல், உயர் நீதிமன்றத்தை அணுகியது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தலைமை நீதிபதியை இடமாற்றம் செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்ற கொலிஜியம் நீதித்துறை உத்தரவை பிறப்பிக்க வில்லை எனவும், அது நிர்வாக உத்தரவு என்பதால் இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் எனவும், மனு விசாரணைக்கு உகந்தது தான் என வாதிட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த மனு விசாரணைக்கு உகந்தது தானா என்பது குறித்த விசாரணைக்காக, மனுவை விசாரணைக்கு பட்டியலிட, பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.