வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு... கொரோனா சோதனையை கட்டாயமாக்குங்க... உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
சென்னை: உருமாற்றம் பெற்ற கொரோனா பரவும் சூழலில் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விமானம், கப்பல் மூலம் வரும் பயணிகளை கண்டிப்பாக 14 நாட்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் வக்கீல் ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் செய்த அதே தவறை மத்திய அரசு தற்போதும் செய்து வருவதாகவும், இன்னொரு ஊரடங்கை அறிவித்தால் மிக மோசமான நிலை ஏற்படும் எனவும் அவர் மனுவில் தெரிவித்து உள்ளார்.
பேயாட்டம்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒரு ஆண்டை கடந்த பிறகும் பேயாட்டம் ஆடி வருகிறது. இந்தியாவில் தற்போது ஓரளவு பாதிப்பு குறைந்து ஆறுதல் அளிக்கிறது. இந்தியாவில் இதுவரை 1 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
புதிய அச்சம்
தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் உருமாற்றம் பெற்ற கொரோனா இங்கிலாந்தில் வேகமாக பரவத் துவங்கியுள்ளது. மிக வேகமாகவும், எளிதாகவும் பரவும் இந்த வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்கள் டிசம்பர் 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
வழக்கு
கடந்த மார்ச் மாதம் சீனாவில் இருந்து வரும் பயணிகள் மட்டும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. பிற நாடுகளில் இருந்து வந்த பயணிகளை சோதனை செய்யாததால் அது கொரோனா பரவியதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. தற்போது உருமாறிய கொரோனா இங்கிலாந்தில் பரவி வருவதால், அங்கு இருந்து மட்டுமல்ல, அனைத்து நாடுகளில் இருந்து வரும் பயணிகளையும் கொரோனா சோதனைக்கு உள்ளாக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதே தவறு
திருச்செந்தூரைச் சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் செய்த அதே தவறை மத்திய அரசு தற்போதும் செய்து வருகிறது. கடந்த 7 நாட்களில் இங்கிலாந்தில் இருந்து வந்த ஆயிரத்து 88 பயணிகளை கண்டறிய நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
14 நாட்கள் தனிமை
மேற்கத்திய நாடுகளைப் போல இன்னொரு ஊரடங்கை அறிவித்தால் மிக மோசமான நிலை ஏற்படும். அதனால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியை மக்கள் விரும்ப வில்லை. எனவே அனைத்து வெளிநாடுகளில் இருந்து, விமானம், கப்பல் மூலம் வரும் பயணிகளை கண்டிப்பாக 14 நாட்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்த வேண்டும். அவர்களுக்கு ஐந்தாவது நாள் கொரோனா பரிசோதனை செய்யா வேண்டும். அதில் கொரோனா அறிகுறி இல்லாவிட்டால் அவர்களை 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.