கோயம்பேட்டில் காவல் உதவி ஆய்வாளர் ராஜீவ் சரமாரியாக தாக்கப்பட்ட வழக்கு.. மேலும் மூவர் கைது
சென்னை: சென்னை கோயம்பேட்டில் காவல் உதவி ஆய்வாளர் ராஜீவை தாக்கிய சம்பவத்தில், மேலும் மூவரை கைது செய்த போலீஸார் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
அரியலூரை சேர்ந்த 23 வயதான முருகானந்தம் என்ற கூலி தொழிலாளி கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த சனிக்கிழமை, தனது நண்பர்களுடன் அமர்ந்து ஊரில் இருக்கும் தாய்க்கு செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் மார்க்கெட் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த போலீசார், முருகானந்தம் மற்றும் அவரது நண்பர்களை தகாத வார்த்தைகளால் பேசி திட்டியுள்ளனர். இதனால் கடும் மன உளச்சலுக்கு ஆளான முருகானந்தம், ஏன் தகாத வார்த்தைகளால் பேசுகிறீர்கள் என போலீஸாரை எதிர்த்து கேள்வி கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த போலீசார் எங்களையே நீ எதிர்த்து பேசுறீயா என கேட்டு லத்தியால் சரமாரியாக அடித்துள்ளனர். வலி தாங்க முடியாமல் முருகானந்தம் கதறினார். இதனால் அருகே இருந்தவர்கள் சம்பவ இடத்தில் கூடியுள்ளனர். கூட்டம் கூடியதை அடுத்து அந்த இடத்திலிருந்து போலீஸார் நகர்ந்து சென்றுள்ளனர்
இளைஞர் முருகானந்தத்தை தாக்கியதை கண்டித்து கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சுமார் 500க்கும் மேற்ப்பட்டோர் சாலைமறியலில் ஈடுப்பட்டனர். இது தொடர்பாக தலைமை காவலர் சுரேஷ் என்பவரை பணியிடை நீக்கம் செய்தனர்.
இந்நிலையில் இது சம்பந்தமாக கோயம்பேடு காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜீவ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட பொழுது வாலிபர்கள் சேர்ந்து தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக ஏற்கனவே 7 பேரை போலிசார் கைது செய்து இருந்தனர்.
இந்நிலையில் உதவி ஆய்வாளர் ராஜீவ் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக இன்று அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த குமரவேல, சென்னை எலிபேன்கேட் பகுதியை சேர்ந்த ஆறுமுகம், வானியம்பாடியை சேர்ந்த விஜய் ஆகிய மூவரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.