சேதமான அரசு பள்ளி.. சீரமைக்குமாறு முதல்வருக்கு கடிதம் எழுதிய சிறுமி.. மு.க.ஸ்டாலின் உடனடி நடவடிக்கை
சென்னை :திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் சேதமடைந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று 8 வயது மாணவி முதல்வர் முக ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். சிறுமியின் கடிதத்தை பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுக்கும் படி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரது 8 வயது மகள் அதிகை முத்தரசி, இவர் அப்பகுதியில் செயல்பட்டு வரும் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
மாணவி அதிகை முத்தரசி தனது பள்ளிக்கு சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்க கோரியும் சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரியும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் முதல் மாவட்ட ஆட்சியர் வரை கோரிக்கை மனு அளித்திருக்கிறார்.
வானளாவிய அதிகாரம் கொண்டது சபாநாயகர் பதவி.. வேறென்னென்ன அதிகாரங்கள் இருக்கு தெரியுமா?
நீதிமன்றத்தில் தகவல்
ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் வழக்கறிஞரான தனது தந்தையின் வழிகாட்டுதலின்படி கடந்த 2019ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவி அதிகை முத்தரசி பள்ளியின் நிலையை குறிப்பிட்டு பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இதனை அடுத்து அக்டோபர் மாதம் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மறு விசாரணையின்போது பள்ளி சீரமைக்கப்பட்டு இடம் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தவறான தகவல்
இதற்கு மாணவி அதிகை முத்தரசி தரப்பில் மறுப்பு தெரிவித்து வாதம் முன்வைக்கப்பட்டது. புதிய கட்டிடம் கட்டாமல் வெறும் வர்ணம் மட்டும் பூசிவிட்டு பள்ளி சீரமைக்கப்பட்டுள்ளதாக தவறான தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக மாணவி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
புதிய பள்ளி கட்டிடம்
இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி நடைபெற்ற இறுதி விசாரணையின் போது இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் சுந்தரேஷ் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அரசு வழக்கறிஞரை அழைத்து மாணவர்களின் கல்வி விவகாரத்தில் அரசு வறட்டு கவுரவம் பார்க்க கூடாது என்று
கண்டனம் தெரிவித்து, ஒரு ஆண்டுக்குள் புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தர வேண்டும் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
கிடப்பில் உத்தரவு
இதன் காரணமாக மாணவிக்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது. எதிர்கால நலன் கருதி பெற்றோர் மாணவி வேறு ஒரு தனியார் பள்ளியில் படிக்க சேர்த்தனர். தற்போது மாணவி அதிகை முத்தரசி, தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு ஒன்றை பதிவு தபால் மூலம் அனுப்பி உள்ளார் . அவர் அந்த கடிதத்தில் மீது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சீர்கேடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் புதிய பள்ளி கட்டிடம் ஒரு ஆண்டுக்குள் கட்டித்தர வேண்டும் என உத்தரவிட்டு ஓராண்டுக்கு மேலாகியும் நீதிமன்ற உத்தரவு கிடப்பில் போடப்பட்டுள்ளது.
முதல்வருக்கு கடிதம்
வழக்கின் மனுதாரர் மற்றும் பள்ளி மாணவி என்கின்ற முறையில் நானும் என் தந்தையும் இதற்காக மனு அளித்தோம். அத்துடன் கல்வி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பிலும் புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களால் முடிந்தவரை அறவழியில் நின்று தொடர்ந்து போராடி வந்த போது பள்ளி நலன் சார்ந்த எங்களின் புகார் மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது தாங்கள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
அன்பில் மகேஷ்க்கு உத்தரவு
சிறுமியின் கடிதத்தை பெற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடி நடவடிக்கை எடுக்கும் படி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி அமைச்சர் விரைவில், பள்ளியை பார்வையிட்டு சட்டப் போராட்டம் நடத்தி வரும் எட்டு வயது மாணவி அதிகை முத்தரசி இல்லத்திற்குச் அமைச்சர் சென்று விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.