இந்தியாவுக்கு பொதுமொழியாக இந்தி இல்லையே... இதுதான் ரஜினிகாந்தின் ஆதங்கமா?
Recommended Video
சென்னை: இந்தி பொதுமொழி தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படுத்தியிருக்கும் ஆதங்கம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரே நாடு ஒரே மொழி; ஒரே நாடு ஒரே கட்சி என மத்திய அரசு படுதீவிரமாக தமது கொள்கைகளை முன்னெடுப்பதில் முனைப்பு காட்டுகிறது. நாடு முழுவதும் இது பெரும் விவாதங்களை எழுப்பியிருக்கின்றன.
குறிப்பாக இந்தியாவின் பொது மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்கிற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்தி பேசாத மாநிலங்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன.
போட்ட கோலத்தையே மீண்டும் போடும் ரஜினி.. பின்னாடியே வந்து தாங்கி பிடிக்கும் பாஜக.. புரியாத புதிர்!
ரஜினிகாந்த் கருத்து
தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20-ந் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.
இந்தியை ஏற்கமாட்டார்கள்
இந்தி திணிப்புக்கு எதிராக அவரும் கருத்துகளை தெரிவித்தார். தமிழகம் மட்டுமல்ல தென்னிந்தியாவும் இந்தி திணிப்பை ஏற்காது என்றெல்லாம் கூறிய ரஜினி உதிர்த்த இன்னொரு முத்துதான் சர்ச்சையாகி விவாதப் பொருளாகி இருக்கிறது.
பொதுமொழிக்கு ஆதரவு
அதாவது "எந்தவொரு நாட்டுக்கும் பொதுவான ஒரு மொழி இருப்பது வளர்ச்சிக்கு நல்லது; துரதிருஷ்டவசமாக இந்தியாவில் அதை கொண்டுவர முடியாது" என்று ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். அதாவது இந்தியாவில் இந்தி பொதுமொழியாக இருந்திருக்கலாம்..அதை துரதிருஷ்டவசமாக கொண்டுவர முடியாத நிலை இருக்கிறது என்பதுதான் ரஜினிகாந்தின் ஆதங்கமாக வெளிப்படுகிறது.
பாஜக பாணியில் ரஜினி
திருவள்ளுவரை ஒருபுறம் தலையில் தூக்கி வைப்பதாக போக்கு காட்டிக் கொண்டு இன்னொரு புறம் தமிழுக்கு எதிரான அத்தனை செயல்பாடுகளையும் மேற்கொள்வது பாஜகவின் பாணி. ரஜினிகாந்தும் கூட இந்தி திணிப்பு கூடாது என்றே கூறிக் கொண்டே இந்தி பொதுமொழியாக இருந்திருக்கலாம்.. இல்லாதது துரதிருஷ்டவசமானது என ஆதங்கத்தை கொட்டிருயிருக்கிறார்.
முரண்பாடான கருத்துகள்
எந்த ஒரு பிரச்சனையிலும் முன்னுக்குப் பின்னாக கருத்து சொல்வதும் கூட ரஜினியின் பாணியாகத்தான் இருக்கிறது. சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற பின்பற்ற வேண்டும்; அதேநேரத்தில் ஐதீகத்தையும் மதிக்க வேண்டும் என கூறியிருந்தார் ரஜினிகாந்த். அதேபோல் மீடு விவகாரத்தில் பெண்கள் பாதுகாக்கப்படவேன்டும்; ஆனால் பெண்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது என்றார், இப்போதும் அதேபாணியில்தான் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ரஜினிகாந்த்.