மெடிக்கலுக்கு போன தமிழ் எழுத்தாளரை 'ஸ்டன்னாக்கிய' போலீஸ்
சென்னை: தமிழகத்தில்தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. அவர் லேசுப்பட்ட எழுத்தாளர் இல்லை. சாகித்திய அகாடமி விருது வாங்கியவர். ஆனால் லாக்டவுனால் வீட்டுக்குள் முடங்கி கிடக்க வேண்டிய நிலை.
எனவே, பொடிநடையாக, வீட்டு ஏரியாவிலுள்ள ஒரு மெடிக்கலுக்கு சென்றுள்ளார். அங்குதான் போலீசார், அவரை வழிமறித்துள்ளனர். எங்கே போறீங்க என போலீஸ் கேட்க, மெடிக்கலுக்குத்தான் என்று சொல்லியுள்ளார் நம்ம எழுத்தாளர்.
ஆனால் போலீஸ் நம்பவில்லையாம். பொய்யா பேசுறீங்க.. உங்க மேல கேஸ் போடப்போறோம் என்று சொல்லியதாம் போலீஸ். ஆனால், நான் ஒரு ரைட்டர் என சொல்லியுள்ளார். அப்படியும் போலீஸ் விடவில்லையாம்.
அதனால், மேலதிகாரி ஒருவருக்கு போன் போட்டு கொடுத்துள்ளார். அவரும், பணியிலிருந்த போலீசாரிடம், "அவர் ஒரு ரைட்டர்.. விட்டுருங்க" என பரிந்துரைத்துள்ளார். இதன்பிறகுதான், அங்கிருந்த போலீசார் சரி கிளம்புங்கள் என்று சொல்லியுள்ளனர்.
ஆனால், இதைக்கூட அந்த எழுத்தாளர் பொறுத்துக் கொண்டார். கிளம்பி போற நேரத்தில் அங்கே நின்ற போலீஸ்காரர், "சார்.. நீங்க எந்த ஸ்டேஷன்ல ரைட்டரா இருக்கீங்க" என்று கேட்டாரே பார்க்கலாம் ஒரு கேள்வி. எழுத்தாளர் ஆடிப்போய்விட்டாராம்.
என்னடா இது தமிழ் எழுத்தாளர்களுக்கு வந்த சோதனை என நொந்தபடி வீடு போய் சேர்ந்துள்ளார் அவர். தனது நண்பர்களிடம் இந்த சம்பவத்தை அவர் சொல்ல, அது இப்போது மெல்ல மெல்ல கசிந்து பரபரப்பு பேச்சுகளுக்கு காரணமாகியுள்ளது.
அண்டை மாநிலமான, கர்நாடகா, கேரளா போன்றவற்றில் எழுத்தாளர்களுக்கு அப்படி ஒரு சமூக அங்கீகாரம் இருக்கிறது. ஆனால், தமிழகத்திலோ, ரைட்டர் என்றால், போலீஸ் ஸ்டேஷன் ரைட்டர் என புரிந்து கொள்ளும் அளவுக்குத்தான் உள்ளோமா என்பதுதான் இந்த சம்பவத்தில் தொக்கி நிற்கும் கேள்வி.