2ஓ திருப்தி தந்ததா.. ஒரு சாமானிய சினிமா ரசிகரின் விமர்சனம்!
Recommended Video
சென்னை: ரஜினிகாந்த் படம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இதில் ரசிகர்கள் இல்லாது நடுநிலையான மக்களும் விரும்பி பார்ப்பர். அதிலும் ஷங்கர் பிளஸ் ஏ.ஆர். ரஹ்மான் காம்பினேஷன் என்றால் கேட்கவா வேண்டும்.
சரி ஒரு சாமானியரின் விமர்சனம் இது.. படிச்சுப் பாருங்க
கடந்த 29-ஆம் தேதி ரஜினியின் 2.ஓ படம் ரிலீஸானது. இது ரோபோவின் தொடர்ச்சி என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் படத்தை இரு விஷயங்களுக்காக மக்கள் எதிர்பார்த்தனர். ஒன்று ரஜினிகாந்த், இன்னொன்று நாட்டின் முதல் 3டி தொழில்நுட்பத்தில் வெளியான படம்.
ரிலீஸ் தேதி மேலும் மேலும் தள்ளி போடப்பட்டே வந்ததால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு "கெட்ட சிட்டி" ரோபோக்கள் பெருகுவது போல் பெருகியது. சரி விஷயத்துக்கு வருவோம். ஒரு படம் என்றால் அதில் நிறை, குறை என இருப்பது சகஜம்தான். 100 சதவீதம் எந்த ஒரு ரசிகரையும் திருப்திப்படுத்தி படமெடுப்பது என்பது இயலாத ஒன்று.
அது போல்தான் இந்த படமும். பெரும் எதிர்பார்ப்புடன் தியேட்டருக்கு சென்றவர்களுக்கு பூர்த்திப்படுத்தியதா என்பது சந்தேகம்தான். 3டி தொழில்நுட்பம், விஎஃப்எக்ஸ் எபெக்ட் எல்லாம் ஓகேதான். ஆனால் படத்தின் கரு கற்பனையான ஒன்றாக இருந்தாலும் லாஜிக் என்பது இல்லை.
செல்போன்கள் என்பது நம் வாழ்வில் ஒரு அங்கமாக உள்ளது. எத்தனையோ கொலை, கொள்ளை, பலாத்கார வழக்குகளில் போலீஸாருக்கு உதவியாக இருப்பது செல்போன்தான். கொலையாளிகளை கூட பிறகு பிடித்து விடலாம், ஆனால் போலீஸார் முதலில் பிடிப்பது செல்லைத்தான். அத்தகைய செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என்று சொல்வது இடிக்கிறது.
அடுத்ததாக ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி ரஜினிக்கு ஓபனிங் இல்லை. இந்த படத்தில் வசீகரனுக்கு ஓபனிங் கொடுக்க முடியாது. அதற்கு பதிலாக சிட்டிக்கு கொடுத்துள்ளார்கள். வடிவேலு டயலாக்கை ரிவர்ஸில் சொல்லத் தோன்றுகிறது.. பினிஷிங் நல்லாருக்கு.. ஆனால் ஓப்பனிங் சரியில்லையேப்பா.
முதல் முறையாக எமி ஜாக்சனை காட்டும்போது அங்கு கவர்ச்சிக்கு ஏன் அவசியம் என்பது தெரியவில்லை. அதுவும் ஒரு பொம்மைக்கு இத்தனை கவர்ச்சி ஏன் என யோசிக்க வைக்கிறது. படத்தில் சிட்டி ரஜினி, குட்டி ரஜினி, அக்ஷய் குமார் ஆகியோரின் நடிப்பு பர்ஸ்ட் கிளாஸ். இந்த படத்தில் வழக்கமாக ரஜினிக்கு பஞ்ச் டயலாக்குகள் வைக்கமுடியாத நிலையிலும் சிட்டியையும் குட்டியையும் பேச வைத்துள்ளார் ஷங்கர்.
அதில் ஓடிபோறது என் சாப்ட்வேர்லயே கிடையாது, நம்பர் -1, நம்பர்-2 எல்லாம் பாப்பா விளையாட்டு, ஐயம் தி ஒன்லி ஒன் சூப்பர், சிங்கம் நெனச்சா கொசுவை ஒன்னும் செய்ய முடியாது, ஆனால் கொசுக்கள் நினைச்சா சிங்கத்தை என்ன வேணாலும் செய்யலாம்.
ரோபோவில், மனிஷன் படைச்சதிலேயே அற்புதமான விஷயங்கள் ஒன்னு நான் இன்னொன்னு நீ என்று ஐஸ்வர்யா ராயிடம் சிட்டி சொல்வது போல் உள்ளது. அது போல் இந்த படத்திலும் வசீகரன் படைச்சதிலேயே அற்புதமான விஷயங்கள் ஒன்னு நான் இன்னொன்னு நீ என ஏமி ஜாக்சனிடம் சிட்டி பேசுவது கைத்தட்டல்களை அள்ளுகிறது.
வசீகரனிடம் சிட்டி என்ன வசீ மேஹ்ஹ் என சொல்வது சூப்பர். மொத்தத்தில் ரஜினியை ஷங்கர் பெண்ட் எடுத்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். படத்தின் இரண்டாம் பகுதி படு சூப்பர். ஒரு தனியார் தொலைகாட்சி நேரலையில் ரஜினி சொன்ன அந்த சஸ்பென்ஸ் கேரக்டர் சிட்டியையே சாப்பிட்டுவிடுகிறது. அதுபோல் பக்சிராஜனை விட குருவியாக வரும் அக்ஷய் குமாருக்கு பாடி லாங்க்வேஜ், முகபாவனை எல்லாமே சூப்பரோ சூப்பர்.
படம் ரஜினி ரசிகர்களுக்கு நல்ல உற்சாகத்தை கொடுத்துள்ளது. மற்றபடி ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் என்ற பெயருக்கு ஏற்ப படத்தை எடுத்துள்ளார் (அதற்காகவே இவ்வளவு செலவு செய்திருப்பாரோ). கோச்சடையானில் ரஜினியை பொம்மை கேரக்டரில் பார்த்துவிட்ட ரசிகர்களுக்கு இந்த படத்தில் சிட்டியின் நடிப்பு மகிழ்சசியை அளிக்கிறது. ஏமி ஜாக்சனுக்கு சிறிய சிறிய காமெடிகளை கொடுத்துள்ளனர்.
ஏ.ஆர். ரஹ்மான் இசை அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். ரசூல் பூக்குட்டியின் சவுண்ட் எபெக்ட்ஸ், தொழில்நுட்பம் என அனைத்துமே ஹாசம். ஆனால் இந்த கதையை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாமோ என தோன்றுகிறது.