பழைய துணி வாங்குவது போல வந்து ரூ. 11 லட்சம் பணத்தை திருடிய கும்பல்
சென்னை: பழைய துணி வாங்குவது போல் வந்து ரூ 11 லட்சத்தை மர்ம கும்பல் ஒன்று சுருட்டிக் கொண்டு சென்றது. தகவலறிந்த போலீஸார் அந்த கும்பலைச் சேர்ந்த ஒரு பெண்ணை கைது செய்து பணத்தையும் மீட்டனர்.
சென்னை தேனாம்பேட்டை, திருவள்ளூவர் சாலை கார்ப்பரேஷன் காலனியில் வசிப்பவர் சுசீலா. இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது கணவர் ரவி. இவர் துணிகளை இஸ்திரி செய்யும் தொழில் செய்து வருகிறார்.
கடந்த 13-ஆம் தேதி இருவரும் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டனர். பின் சுசிலாவின் வீட்டுக்கு ஒரு பெண்ணும், சில இளைஞர்களும் ஆட்டோவில் வந்துள்ளனர். அப்போது தாங்கள் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் அம்மா டிரஸ்ட் நடத்தி வருவதாகவும் பழைய துணிகள் இருந்தால் கொடுங்கள் என்றும் கேட்டுள்ளனர்.
சாயங்காலம் 50 ரூபாய் கொண்டு வந்து கொடுத்திடு.. புரியுதா.. லஞ்சம் கேட்ட தாசில்தார்.. சஸ்பெண்ட்!
11 லட்சம் பணம்
இவர்கள் மீது இரக்கப்பட்ட ரவியின் மகன் பீரோவில் இருந்த பழைய துணி மூட்டையை கொடுத்துள்ளார். ஆனால் அந்த துணி மூட்டையில் வீடு கட்டுவதற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்த ரூ 11 லட்சம் பணம் வைக்கப்பட்டதை இவர் மறந்துவிட்டார்.
பணம்
இதையடுத்து மாலை சுசிலா வந்தவுடன் பீரோவில் துணி மூட்டை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து மகனிடம் கேட்ட போதுதான் விவரம் தெரியவந்துள்ளது. எனினும் அவர்களாகவே வந்து பணத்தை தருவார்கள் என நம்பியிருந்தனர்.
முகவரியில் விசாரணை
ஆனால் அவர்களோ வரவில்லை. இதையடுத்து அந்த பெண் கொடுத்த அம்மா டிரஸ்ட் நோட்டீஸில் உள்ள முகவரிக்கு நேரில் போய் பார்த்தனர். அப்போது அங்கு அறக்கட்டளை ஏதும் இல்லை. பாழடைந்த வீடு ஒன்று உள்ளது. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அடுத்து சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மகாலட்சுமி
ரவியின் வீட்டுக்குச் சென்ற போலீஸார் அங்கு அக்கம்பக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை ஆய்வு செய்தனர். அதில் ஆட்டோவில் ஒரு பெண் மற்றும் சில இளைஞர்கள் துணி மூட்டையுடன் செல்வது தெரியவந்தது. உடனே அந்த ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரித்ததில் அவர் செங்குன்றத்தை சேர்ந்த மகாலட்சுமி (45) என்பது தெரியவந்தது.
துணி சேகரிப்பு குடோன்
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் அந்த பெண்ணிடம் விசாரணை செய்ததில் அந்த பணம் இருந்ததை ஒப்புக் கொண்டார். மேலும் விசாரணையில் பழைய துணிகளை வாங்கி கொண்டு செங்குன்றத்தில் உள்ள குடோனில் கொடுத்தால் அவர் கமிஷன் தருவார் என்பதால் ஆதரவற்றவர்களுக்காக துணி சேகரிக்கிறோம் என பொய் கூறி துணி சேகரித்து வந்தது தெரியவந்தது.
அரவிந்தனை தேடும் போலீஸ்
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து அரவிந்தனின் குடோனுக்கு சென்ற போலீஸார் , அங்கு மூட்டை மூட்டையாக துணிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மகாலட்சுமியை புழல் சிறையில் அடைத்தனர். இதையடுத்து தப்பியோடிய அரவிந்தனை தேடி வருகின்றனர். சிறுக சிறுக குருவி சேர்ப்பது போல் சேர்த்த பணத்தை போலீஸார் மீட்டுக் கொடுத்ததை அடுத்து சுசிலாவும் ரவியும் கண்ணீர் மல்க கைகூப்பி நன்றி கூறினர்.