நான் தலைமைக்கு தலையை ஆட்டும் ரோபோவோ கைப்பாவையோ இல்லை..... குஷ்புவும் சர்ச்சை ட்வீட்களும்
நான் தலைமைக்கு தலையாட்டும் பொம்மையில்லை என்று குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பலரும்வேலையில்லாமல் எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை: நான் தலையை ஆட்டும் ரோபோ அல்லது கைப்பாவையாக இருப்பதை விட உண்மையை பேசுகிறேன் என தெரிவித்துள்ளார் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு. வேலையில்லாத சோம்பேறிகளின் மனதில் சாத்தான் குடியிருப்பான் அவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன் என்றும் பதிவிட்டிருக்கிறார் குஷ்பு.
புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதை வரவேற்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் குஷ்பு. புதிய கல்விக்கொள்கையின் சில அம்சங்களுக்கு காங்கிரஸ் கட்சி தலைமை விமர்சித்து வரும் நிலையில் அந்த நிலைப்பாட்டிற்கு எதிராக இருந்தது குஷ்புவின் பதிவு. இது பல சர்ச்சைகளை எற்படுத்தியது.
குஷ்பு காங்கிரஸ் கட்சியை விட்டு பாஜகவிற்கு தாவப்போவதாக பலரும் பதிவிட்டனர். அவர்களுக்கு தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டு வந்தார். சிலருக்கு காட்டமாகவும் பதிலடி கொடுத்தார். புதிய கல்விக்கொள்கையில் தனது நிலைப்பாடு, கட்சியிலிருந்து வேறுபடுகிறது என்றும், அதற்காக நான் ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார் குஷ்பு. இதோ குஷ்புவின் சில ட்விட்டர் பதிவுகள்.
காங்கிரஸில் கலகக் குரல்-குஷ்பு மீது ஜோதிமணி கடும் பாய்ச்சல்- கட்சியை சேதப்படுத்த உரிமை கிடையாது!
தலையாட்டும் ரோபோ அல்ல
எந்தவொரு மசோதா அல்லது வரைவு குறித்து வேறுபட்ட கருத்துக்கள் இருக்கும் எனவும், தான் ஜனநாயகத்தை முழுமையாக நம்பும் ஒருவர் எனவும், கருத்து வேறுபாடு இருப்பது நல்லது என்று நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார் குஷ்பு. நான் தலையை ஆட்டும் ரோபோ அல்லது கைப்பாவையாக இருப்பதை விட உண்மையை பேசுகிறேன் என்கிறார் குஷ்பு.
நாட்டின் குடிமகள்
புதிய கல்வி கொள்கையில், கட்சியின் நிலைப்பாட்டிலிருந்து எனது நிலைப்பாடு வேறுபடுகிறது. இதற்காக ராகுலிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். நான் உண்மையை தான் பேசுகிறேன். நாட்டின் குடிமகனாக எனது கருத்தை பதிவிட்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மாற்றத்தை வரவேற்கிறேன்
புதிய கல்வி கொள்கையில் சில இடங்களில் குறை இருப்பினும், இந்த மாற்றத்தை நான் வரவேற்கிறேன். எதிர்கட்சி என்பது நாட்டின் எதிர்காலத்திற்காக உழைப்பது. ஒன்றிணைந்து செயல்படுவதே அரசியல். இதனை பாஜக புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக நான் பாஜகவில் இணைவேன் என்பதில் உண்மையில்லை என்றும் பதிவிட்டுள்ளார் குஷ்பு.
சுதந்திரமான சிந்தனை
ஒரு கட்சி என்று இருந்தால் பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் இருக்கும். நம்முடைய நாடு பலதரப்பு மக்களால் ஆனது. பல மத நம்பிக்கைகள் கொண்டவர்களும் இருக்கிறார்கள். மத நம்பிக்கை இல்லாதவர்களும் இருக்கிறார்கள். நான் சொந்த சிந்தனை கொண்ட ஒரு தனிநபர் என தெரிவித்துள்ள அவர், புதிய கல்விக்கொள்கையில் சில இடங்களில் குறைகள் இருப்பினும், மாற்றத்தை நேர்மறையுடன் பார்ப்பதாக தெரிவித்துள்ளார் குஷ்பு.
ஒன்றிணைந்து செயல்படுவது
எதிர்க்கட்சி என்பது நாட்டின் எதிர்காலத்திற்காக உழைப்பதாகும் எனவும், அரசியல் என்பது சத்தம் போடுவது மட்டுமல்ல, அது ஒன்றிணைந்து செயல்படுவதும் ஆகும். இதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
வேலையில்லாதவர்கள்
சிலதை நினைத்து நான் சிரித்துவிட்டுதான் போக வேண்டும். சிலர் எதையாவது கற்பனை செய்து போட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு வேலையில்லாமல் எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். வேலையில்லாத சோம்பேறிகளின் மனதில் சாத்தான் குடியிருப்பான்( jobless n idle mind is a devil's workshop) அவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன் என்றும் பதிவிட்டிருக்கிறார் குஷ்பு. ஒரே ஒரு ட்வீட் போட்டு அது சர்ச்சையாகி அதற்கு பதில் தரும் வகையில் பல ட்வீட்டுகளை போட்டு வருகிறார் குஷ்பு.