144 தடை எங்களுக்கு இல்லை.. அப்படித்தான் சுற்றுவோம்.. போலீஸுக்கே சவால் விடும் "கோ அண்ட் கோ"
சென்னை: தமிழக அரசு 144 தடை உத்தரவு மக்களுக்குத்தான் போட்டுள்ளது, எங்களுக்கு கிடையாது.. நாங்க அப்படித்தான் ரோட்டில் திரிவோம் என "இவர்கள்" காவல்துறைக்கே சவால் விடும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
Recommended Video
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டத்திலும் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் உத்தரவையும் மீறி பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் சாலைகளில் சென்று வருகின்றனர்.
பறிமுதல்
அவர்களை காவல்துறையினர் நிறுத்தி எச்சரித்து அனுப்பி வருகின்றனர். 144 தடை உத்தரவை மீறியதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 50 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
எத்தனை தண்டனைகள்
விதிகளை மீறி சாலைகளில் சுற்றித் திரிவோரை போலீஸார் தடுத்து நிறுத்தி நூதன தண்டனைகள் கொடுத்து வருகிறார்கள், தோப்புக் கரணம் போடச் சொல்வது, நாற்காலியில் உட்காருவது போல் உட்காருவது போன்றவற்றை செய்ய சொல்கின்றனர். இன்னும் சில இடங்களில் போலீஸார் தடியடி நடத்தி விரட்டினர்.
பொதுமக்கள்
இந்நிலையில் சாலைகளில் செல்லும் பொதுமக்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வரும் வேளையில் 144 தடை உத்தரவு என்பது பொதுமக்களுக்கு தான் எங்களுக்கு கிடையாது. எங்களை நீங்கள் என்ன செய்வீர்கள். நாங்கள் அப்படித்தான் ரோட்டில் திரிவோம் என்று காவல்துறைக்கே சவால்விட்டு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாடுகள் சாலையில் நின்று கொண்டிருந்தன.
சுவாரசியம்
காவல்துறையினர் அவற்றை விரட்டியும் அசராது அதே பகுதியிலேயே மாடுகள் சுற்றி சுற்றி வந்தன. இந்த சம்பவம் சுவாரசியமாக இருந்தது. விலங்குகள் மூலம் கொரோனா பரவாது என கூறப்பட்டுள்ளது. போக்குவரத்து இல்லாத நிலையில் நகரங்கள் எப்படியிருக்கின்றன என பொதுமக்கள் பார்வையிட வெளியே வருவது போல் இந்த மாடுகளும் வெளியே வந்தனவோ.