"இந்தி" படத்தை வெளியிடுவது ஏன்? சட்டென கேட்ட செய்தியாளர்.. உடனே உதயநிதி ஸ்டாலின் சொன்ன விளக்கம்!
சென்னை: இந்தி திணிப்பைத்தான் திமுக எதிர்க்கிறது. யார் வேண்டுமானாலும் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
நடிகர் அமீர்கான் தயாரிப்பில் வெளியாக உள்ள 'லால் சிங் சத்தா' திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கான உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இப்படம் வெளியீட்டையொட்டி இன்று சென்னையில் படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் மேற்குறிப்பிட்டவாறு பதிலளித்துள்ளார்.
பால், தயிரை விடுங்க.. கோமியத்திற்கு 50% கூட ஜிஎஸ்டி ஏத்திக்கோங்க.. மக்களவையில் திமுக எம்பி தாக்கு
ஆஸ்கர்
ஹலிவுட்டில் வெளியான 'ஃபாரஸ்ட் கம்ப்' எனும் திரைப்படம் 'லால் சிங் தத்தா' என இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. 1984ல் வெளியான ஃபாரஸ்ட் கம்ப் எனும் நாவலின் அடிப்படையில் ஹாலிவுட் நட்சத்திரமான டொம் ஹாங்கின் நடிப்பில் வெண்டி பைனர்மன், ஸ்டீவ் டிஷ், ஸ்டீவ் ஸ்டார்கி ஆகியோரின் தயாரிப்பில் ராபெர்ட் செமெக்கிஸ் இயக்கத்தில் 1994ல் இந்த திரைப்படம் வெளியானது. வெளிவந்து ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆன நிலையிலும் இப்படம் குறித்து சிலாகித்து பேசுவோர் பலர் உண்டு. 13 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்த திரைப்படம் 6 ஆஸ்கர்களை அள்ளி சென்றது.
'ரெட் ஜெயன்ட் மூவிஸ்'
இந்நிலையில் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய நடிகர் அமீர்கான் முன்வந்தார். அவருடைய சொந்த தயாரிப்பில் 'லால் சிங் சத்தா' எனும் பெயரில் படம் தயாரிக்கப்பட்டது. இதில் அமீர்கானும்-கரீனா கபூரும் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படம் வெளியீட்டுக்கு முன்னரே சுமார் ரூ.8 கோடி அளவில் வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை தமிழ்நாடு முழுவதும் வெளியிடும் உரிமையை 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' நிறுவனம் பெற்றுள்ளது.
சிறந்த நடிகர்
படம் வெளியீடு தொடர்பாக இன்று சென்னையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் அமீர்கான், உதயநிதி ஸ்டாலின் என திரைப்பட குழுவினர் பங்கேற்றனர். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "இந்தி படத்தை வெளியிடும் உரிமையையாவது விட்டு வைப்போம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அமீர்கான் திடீரென எனக்கு ஒருநாள் வீடியோ காலில் பேசினார். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவர் கேட்டவுடன் நான் ஓகே சொல்லிவிட்டேன். இந்த திரைப்படத்தில் ஆமீர்கான் மீண்டும் தன்னை உலக சினிமாவில் சிறந்த நடிகராக நிரூபித்துள்ளார்" என்று கூறினார்.
இந்தி திணிப்பு
பின்னர் செய்தியாளர்கள் இந்தி திணிப்பு எதிர்ப்பை அடித்தளமாக கொண்ட மாநிலத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்த திரைப்படத்தை வெளியிடுகிறது. எதிர்வரும் விமர்சனங்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்? என கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "எந்த மொழியையும் நாம் எதிர்க்கவில்லை. மொழி திணிப்பைத்தான் நாம் எதிர்க்கிறோம்" என கூறினார். மேலும், "இதற்கு முன்னர் தெலுங்கு படத்தை வெளியிட்டிருக்கிறோம். அதேபோலதான் இதுவும்" எனக் கூறியுள்ளார்.