துப்பாக்கிச் சூடுகளில் 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை-- இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!
சென்னை: தமிழகத்தில் வழங்கப்படும் இலவசர மின்சாரத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பது தற்போதைய அச்சம். இந்த இலவச மின்சார உரிமையை பெறுவதற்கு தமிழகம் நடத்திய போராட்டங்களை விவரிக்கிறார் சமூக செயற்பாட்டாளர் மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.
இது தொடர்பாக கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதியிருப்பதாவது:
1970 ல் அன்றைய தமிழக அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக உயர்த்தி அறிவித்தது. இதை எதிர்த்து கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். 1970 ம் ஆண்டு மே 09 ல் பல்லாயிரக் கணக்கான மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களில் விவசாயிகள் கோயம்புத்தூரில் பேரணி நடத்தினார்கள். நகரம் அதிர்ந்தது. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைத் திரும்பப் பெறா விட்டால், ஜூன் 15 ல் அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும், ஜூன் 19 ல் பந்த் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
போராட்டத்தின் உச்சத்தில் அரசாங்கம் ஒடுக்கு முறையை ஏவி, மூன்று விவசாயிகளின் உயிரைப் பறித்தது. அதனால் ஏற்பட்ட விளைவுகளும் அரசைப் பணியவைத்தன. மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 1 பைசா குறைக்கப்பட்டது. கடன் வசூல் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. இதன் காயங்கள் ஆறுவதற்கு முன்பாகவே மாநில அரசு மீண்டும் மின்சாரக் கட்டணத்தை 9 பைசாவிலிருந்து 12 பைசாவுக்கு உயர்த்தி, 01.01.1972 முதல் புதிய கட்டணத்தை அமல் படுத்த உத்தரவிட்டது. இதை எதிர்த்து கோவை மாவட்ட விவசாயிகள் முதலில் கிளர்ந்தெழுந்தனர். 1972 மார்ச்சில் 12 அம்சக் கோரிக்கைகளை, அரசிடம் முன்வைத்து நிறைவேற்றக் கோரினார்கள் விவசாயிகள். 15.04.1972 குள் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கெடு விதித்தார்கள். மே 9 ல் மறியல் போராட்டம் தொடங்கியது. போராடிய விவசாயிகள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். நகரவாசிகள் தினமும் வாங்கும் காய்கறிகளையும் பாலையும் விவசாயிகள் நகரங்களுக்கு அனுப்புவதை 02.06.1972 முதல் 04.06.1972 வரை நிறுத்தினார்கள். இதன் மூலம் தட்டுப்பாடு ஏற்படுத்தி, அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்தனர்.
இதற்குப் பின்னும் அரசு பணியாததால் கோவை விவசாயிகள் இன்றைய தினம் புதுமையாக மாட்டு வண்டிப் போராட்டத்தை நடத்தினார்கள். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மாட்டு வண்டிகள், கோயம்புத்தூரின் பிரதான சாலைகளிலும், தெருக்களிலும் அரசு அலுவலகங்களுக்கு முன்பும் நிறுத்தப்பட்டன. கோயம்புத்தூர் நகரமே ஸ்தம்பித்தது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் 'தி நியூயார்க் டைம்ஸ்' உள்ளிட்ட உலகப் பத்திரிகைகள் விவசாயிகளைப் பாராட்டி 'மாட்டு வண்டிகள் இந்திய விவசாயிகளின் பாட்டன் டாங்குகள்' என்று இந்தப் போராட்டச் செய்தியை வெளியிட்டன. இதற்குக் காரணமாக இருந்த பல தலைவர்களில் நாராயணசாமி நாயுடுவும், டாக்டர் சிவசாமியும் குறிப்பிடத் தக்கவர்கள். போராட்டத்தின் விளைவை உணர்ந்த அரசு பணிந்தது. நாராயணசாமி நாயுடு தலைமையில் 1972 ஜூலை 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை அரசுடன் பேச்சு வார்த்தை நடந்தது. அதன்படி ஜூலை 19 ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. தற்காலிகமாக மின் கட்டண உயர்வு பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டது. மின் கட்டணத்தில் யூனிட் ஒன்றுக்கு 1 பைசா குறைக்கப்பட்டது. சிறையில் இருந்த அனைத்து விவசாயிகளும் விடுவிக்கப்பட்டார்கள்.
பின்னர் 'தமிழக விவசாயிகள் சங்கம்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு நாராயணசாமி நாயுடு இதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழகத்தில் விவசாயிகளின் போராட்டம் 1930ல் துவங்கி நெல்லை மாவட்டம் கடம்பூர் அருகே, ஆங்கிலேயர் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு விவசாயியைச் சுட்டு அவர் மரணமடைந்தது வரலாற்றுச் செய்தி.
விடுதலைப் போராட்ட காலத்தில் உத்தமர் காந்தியே வங்கத்தில் அவுரி விவசாயிகள் போராடிய போது, முன்னின்று அந்தப் போராட்டத்தை நடத்தியதும் வரலாறு.வடகேரளாவில் நடந்த விவசாயிகள் போராட்டம். 1957லேயே ஆங்காங்கு விவசாயிகள் சிறுசிறு குழுக்களாகப் போராட்டங்கள் நடத்தினாலும், விவசாயிகள் சங்க ரீதியாக 1966ல் விவசாயிகள் சங்கம் உருவெடுக்கப்பட்டது.
அப்பொழுது நாராயணசாமி நாயுடு, கிருஷ்ணசாமி கவுண்டர், முத்துமல்ல ரெட்டியார், முத்துசாமி கவுண்டர், டாக்டர் .சிவசாமி, டாக்டர்.கொண்டல்சாமி, மயில்சாமி, வி.கே.ராமசாமி, திருமதி சுந்தராம்பாள், நஞ்சகவுடர், கு.வரதராஜன், சாத்தூர் ஜெகந்நாதன் போன்ற பலர் பிரச்சார தளத்தை அமைத்து விவசாயிகள் சங்க அமைப்பைக் கட்டமைத்தனர். இன்னும் விடுபட்ட,கவனத்திற்க்கு வாரதவர்களின் பெயர்களையும் பதிவு செய்ய வேண்டும்.
1970ல் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக உயர்த்தியதை தமிழக விவசாயிகள் போராடினார்கள். 1970 மே 9 ஆம் தேதி பல்லாயிரக்கணக்கான மாட்டு வண்டிகள் டிராக்டர்கள் கலந்துக் கொள்ள பெரும் பேரணி நடந்து கட்டைவண்டி போராட்டம் என்று கோவை நகரையும் மற்ற தமிழக நகரங்களையும் திக்குமுக்காட செய்தனர் அன்றைய விவசாயிகள். நகரங்கள் அதிர்ந்தது. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைத் திரும்பப் பெறா விட்டால், ஜூன் 15-ல் அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும், ஜூன் 19-ல் பந்த் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
போராட்டத்தின் உச்சத்தில் அரசாங்கம் ஒடுக்கு முறையை ஏவி, மூன்று விவசாயிகளின் உயிரைப் பறித்தது. அதனால் ஏற்பட்ட விளைவுகளும் அரசைப் பணியவைத்தன. மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 1 பைசா குறைக்கப்பட்டது. கடன் வசூல் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது.
காயங்கள் ஆறுவதற்கு முன்பாகவே மாநில அரசு மீண்டும் மின்சாரக் கட்டணத்தை 9 பைசாவிலிருந்து 12 பைசாவுக்கு உயர்த்தி, 01.01.1972 முதல் புதிய கட்டணத்தை அமல் படுத்த உத்தரவிட்டது. இதை எதிர்த்து கோவை மாவட்ட விவசாயிகள் முதலில் கிளர்ந்தெழுந்தனர். 1972 மார்ச்சில் 12 அம்சக் கோரிக்கைகளை, அரசிடம் முன்வைத்து நிறைவேற்றக் கோரினார்கள் விவசாயிகள்.
15.04. 1972-க்குள் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கெடு விதித்தார்கள். மே 9-ல் மறியல் போராட்டம் தொடங்கியது. போராடிய விவசாயிகள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். நகரவாசிகள் தினமும் நுகரும் காய்கறிகளையும் பாலையும் விவசாயிகள் நகரங்களுக்கு அனுப்புவதை 02.06.1972 முதல் 04.06.1972 வரை நிறுத்தினார்கள்.
இதன் மூலம் தட்டுப்பாடு ஏற்படுத்தி, அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுப்பதே நோக்கம்.
இதற்குப் பின்னும் அரசு பணியாததால் கோவை விவசாயிகள் 07.06.1972-ல் புதுமையாக மாட்டு வண்டிப் போராட்டத்தை நடத்தினார்கள். மாவட்டத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான மாட்டு வண்டிகள், கோவை நகரின் சாலைகளிலும் சந்துபொந்துகளிலும் மத்திய சிறைச்சாலைக்கு முன்பும் நிறுத்தப்பட்டன. கோவை நகரம் ஸ்தம்பித்தது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் 'தி நியூயார்க் டைம்ஸ்' உள்ளிட்ட உலகப் பத்திரிகைகள் அவர்களைப் பாராட்டி 'மாட்டு வண்டிகள் இந்திய விவசாயிகளின் பாட்டன் டாங்குகள்' என்று இந்தப் போராட்டச் செய்தியை வெளியிட்டன. இதற்குக் காரணமாக இருந்த பல தலைவர்களில் நாராயணசாமி நாயுடுவும், டாக்டர் சிவசாமியும் குறிப்பிடத் தக்கவர்கள்.
போராட்டத்தின் வீச்சை உணர்ந்த அரசு பணிந்தது. நாராயணசாமி நாயுடு தலைமையில் 1972 ஜூலை 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை அரசுடன் பேச்சு வார்த்தை நடந்தது. அதன்படி ஜூலை 19-ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. தற்காலிகமாக மின் கட்டண உயர்வு பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டது. மின் கட்டணத்தில் யூனிட் ஒன்றுக்கு 1 பைசா குறைக்கப்பட்டது. சிறையில் இருந்த அனைத்து விவசாயிகளும் விடுவிக்கப்பட்டார்கள்."
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்ற பல்வேறு போராட்டங்கள், ஏறத்தாழ இருபது ஆண்டுகள் முன்னெடுத்து பல விவசாயிகள் உயிர்த் தியாகம் செய்து கிடைத்தது தான் இலவச மின்சாரம். எம்ஜிஆர் ஆட்சியில் சிறுகுறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அறிவித்தாலும் இந்தியாவிலேயே முதன்முறையாக அனைத்து விவசாயிகளுக்கும் 1989 ஆட்சிக் காலத்தில் கருணாநிதி அறிவித்தார். அதிலிருந்து இலவச மின்சாரம் தொடர்ந்தது. நன்றாக நினைவிருக்கிறது
1950,60,80 இறுதி வரை விவசாயிகள் கரண்ட் பில் கட்டுவது என்பது ஒரு பாடாக தத்தளிப்பார்கள். அப்படியே கட்டுவதற்கு பணம் இருந்தால் கூட சாதாரண விவசாயி கூட குருவிக்குளம், கழுகுமலை, கோவில்பட்டி, சங்கரன்கோவில் என அந்தந்த வட்டார விவசாயிகள் சிரமப்பட்டு அங்கே சென்று மின்சாரக் கட்டணத்தை கட்ட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவார்கள். இன்றைக்கு இருப்பது போல போக்குவரத்து வசதிகள் கிடையாது. வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு அருகாமையில் உள்ள நகரங்களுக்கு சென்று கட்ட வேண்டும். பணமில்லாத விவசாயிகள் கடன் வாங்கி மாதா மாதம் கட்டி அவஸ்தைப் படுவதும் உண்டு. இப்படியான பாடுகள் விவசாயிகளுக்கு மின்கட்டணத்தில் இருந்தன.இந்த பிரச்சனைகளை எல்லாம் எதிர்த்து விவசாயிகள் போராடும்போது தான் காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டிற்கு பலியானார்கள்.
அப்படியான நிலையில், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் விவசாயிகள் இராமசாமி, மாரப்பன், ஆயிக்கவுண்டர் ஆகியோர் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார்கள்.
கோவில்பட்டி அருகே, பழைய அப்பநேரி கிராமத்தில் சேர்ந்த கந்தசாமி நாயக்கர் 05-07-1972இல் கோவில்பட்டியில் நடந்த விவசாயிகள் சங்க போராட்டத்தில் சுட்டுத் தள்ளப்பட்டார். அன்னாரின் பேரில் படிப்பகம் ஒன்றினை அவருடைய சொந்த கிராமமான பழைய அப்பநேரியில் நிறுவ பெருந்தலைவர் காமராஜர் நேரில் வந்து 45 ஆண்டுகளுக்கு முன்னர் அடிக்கல் நாட்டியதை யாரும் பொருட்படுத்தவும் இல்லை. அன்றைய இந்திரா காந்தி அமைச்சரவையில் இருந்த மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலமும் நேரடியாக ஆறுதல் தெரிவிக்க பழைய அப்பநேரிக்கு வந்தார்.
இதே காலக்கட்டத்தில் 05-07-1972இல் சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் ஒன்பது விவசாயிகளும், அன்று ஒன்றுபட்ட இராமநாதபுரம் மாவட்டம், இன்றைக்கு விருதுநகர் மாவட்டம் வெற்றிலையூரணி, மீசலூர், பாலவனத்தம் கிராமங்களில் முறையே ஒருவர் வீதம் மொத்தம் மூன்று பேரும், பெருமாநல்லூரில் மூன்று பேரும், ஆக மொத்தம் 15 விவசாயிகள் துப்பாக்கிச் சூடுக்கு பலியானார்கள். இறுதியாக 1993ல் கோவில்பட்டி சம்பவம் வரை 46 விவசாயிகள் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளானதாக தகவல்கள்.
ஜெயலலிதா ஆட்சியில் கோவில்பட்டியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் எத்திராஜ் நாயக்கரும் ஜோசப் இருதய ரெட்டியாரும் பலியாகினர். இது தான் விவசாயிகள் மீது நடந்த துப்பாக்கிச்சூடு. இதற்கு ஓய்வுப்பெற்ற நீதிபதி சுப்ரமணியன் தலைமையில் 07.04.1993ல் நீதி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. விவசாயிகள் சார்பில் நான் ஆஜரானேன். இதன் அறிக்கையை 05.05.1994ல் சட்டமன்றத்தில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா வைத்தார். இப்படியான பல போராட்டங்களும் நிகழ்வுகளும் உள்ளன.
விவசாயிகளின் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு வழங்கப்பட்ட தொகையை கூட பெறுவதற்கு இவருக்கு வாரிசு கூட இல்லை. இவரின் மனைவியும் ஏழ்மையிலேயே மறைந்துவிட்டார். தியாகி கந்தசாமி நாயக்கர்க்கு நினைவு தூண் கோவில்பட்டி மெயின் ரோடில் உள்ள பயணியர் விடுதியில் நிறுவப்பட்டது. அதுவும் கேட்பாரற்று, அதிகாரிகளால் ஒரு ஓரமாக கிடத்தப்பட்டுவிட்டது.
கோவில்பட்டியில் அவரின் பெயரில் நிறுவப்பட்ட நினைவுத் தூணையும், அவர் கிராமத்தில் திட்டமிடப்பட்டுள்ள படிப்பகத்தையும் உடனே அமைக்க அனைவரும் தங்களுடைய ஒத்துழைப்பை வழங்க வேண்டுகிறேன்.
இதுவரை 46 விவசாயிகள் துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளாகினார், சிலர் காயங்களுடன் சிகிச்சை பெற்று இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இன்னுயிரைத் தந்த அந்த தியாகிகளின் பெயர்களை முடிந்தளவு வரிசைப்படுத்துகிறேன்.
1 ஆயிகவுண்டர் (33) 19.06.1970 பெருமாநல்லூர், கோவை மாவட்டம்
2 மாரப்பக்கவுண்டர் (37) 19.06.1970 பெருமாநல்லூர், கோவை மாவட்டம்
3 இராமசாமி (25) 19.06.1970 பெருமாநல்லூர், கோவை மாவட்டம்
4 ஆறுமுகம் (25) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
5 முத்துச்சாமி (21) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
6 சாந்தமூர்த்தி (20) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
7 மணி (30) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
8 இராமசாமி (முத்து) (32) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
9 பிச்சைமுத்து (21) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
10 கோவிந்தராஜுலு (16) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
11 விவேகானந்தன் (35) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
12 இராமசாமி (23) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
13 முத்துக்குமாரசாமி (22) 05.07.1972 அய்யம்பாளையம், பல்லடம் தாலுகா
14 சுப்பையன் (32) 05.07.1972 அய்யம்பாளையம், பல்லடம் தாலுகா
15 கந்தசாமி நாயக்கர் (55) 05.07.1972 பழைய அப்பநேரி, கோவில்பட்டி தாலுகா
16 சீனிவாசன் (18) 05.07.1972 சாத்தூர் தாலுகா, இராமநாதபுரம் ஜில்லா
17 கந்தசாமிரெட்டியார் (42) 05.07.1972 அருப்புக்கோட்டை, சாத்தூர் தாலுகா
18 நம்மாழ்வார் (20) 05.07.1972 சூலக்கரை, சாத்தூர் தலுகா
19 கிருஷ்ணசாமி நாயக்கர் - - கோவை சிறையில்
20 பெரியகருப்பன் - - திருச்சி சிறையில்
21 நாச்சிமுத்துக்கவுண்டர் (50) 09.04.1978 வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம்
22 வி.சுப்ரமணியன் (30) 09.04.1978 வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம்
23 பி.சின்னசாமி கவுண்டர் (51) 09.04.1978 வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம்
24 கே.குப்புசாமி (29) 09.04.1978 வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம்
25 பி.கிருஷ்ணமூர்த்தி (25) 09.04.1978 வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம்
26 பி.மாணிக்ககவுண்டர் (52) 09.04.1978 வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம்
27 ஆரோக்கியசாமி (50) 10.04.1978 நொச்சியோடைப்பட்டி, திண்டுக்கல் தாலுகா
28 முருகேசக்கவுண்டர் (47) 11.04.1978 ஒடுகத்தூர், வேலூர் தாலுகா, (வா.ஆ)
29 ஆர்.அரசுத்தேவர் (39) 04.04.1979 வாகைக்குளம், அருப்புக்கோட்டை தாலுகா
30 பி.சர்க்கரை தேவர் (35) 04.04.1979 வாகைக்குளம், அருப்புக்கோட்டை தாலுகா
31 வி.புலியுடை தேவர் (32) 04.04.1979 வாகைக்குளம், அருப்புக்கோட்டை தாலுகா
32 முத்து வேலம்மாள் (52) 04.04.1979 வாகைக்குளம், அருப்புக்கோட்டை தாலுகா
33 வி. பாக்யத்தாள் (37) 04.04.1979 வாகைக்குளம், அருப்புக்கோட்டை தாலுகா
34 மகாலிங்கம் (19) 23.04.1979 உடுமலைப்பேட்டை, கோவை ஜில்லா
35 வேலுச்சாமி (34) 23.04.1979 உடுமலைப்பேட்டை, கோவை ஜில்லா
36 சாத்தூரப்பநாயக்கர் (56) 31.12.1980 குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா
37 வெங்கடசாமி நாயக்கர் (55) 31.12.1980 குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா
38 வரதராஜ் நாயக்கர் (32) 31.12.1980 குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா
39 என்.வெங்கடசாமி (22) 31.12.1980 குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா
40 ரவீந்திரன் (17) 31.12.1980 குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா
41 முரளி (13) 31.12.1980 குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா
42 மணி (17) 31.12.1980 டி.சி.கண்டிகை, திருத்தணி தாலுகா
43 ஏழுமலை (22) 31.12.1980 வீரப்பார், பண்ருட்டி தாலுகா, கட்லூர்
44 கி. துளசிமணி - - சித்தோடு கங்கார்புரம், பவானி வட்டம்
45 எத்திராஜ நாயக்கர் - 29.03.1993 வெங்கடாசலபுரம் தாலுகா, சங்கரன்கோவில் வட்டம்
46 ஜோசப் இருதய ரெட்டியார் - 29.03.1993 அகிலாண்டபுரம், ஒட்டபிடாரம் வட்டம்
*4.7.1980ல் சென்னையில் நடைபெற்ற தமிழக விவசாய சங்க மாநாட்டிற்கு சென்ற வாகனங்கள் கவிழ்ந்து (விபத்து ஏற்பட்டு) உயிர் நீத்த விவசாயிகள்*
வ.எண் பெயர் இடம்
1 முத்துச்சாமி ஆலத்துரான்பட்டி, திண்டுக்கல்.
2 பொ. பெருமாள் ஆலத்துரான்பட்டி, திண்டுக்கல்.
3 பொன்னுச்சாமி ஆலத்துரான்பட்டி, திண்டுக்கல்.
4 தண்டபாணி ஆலத்துரான்பட்டி, திண்டுக்கல்.
5 பழனிச்சாமி ஆலத்துரான்பட்டி, திண்டுக்கல்.
6 சுக்குரு (எ) சுப்பிரமணி ஆலத்துரான்பட்டி, திண்டுக்கல்.
7 முத்துச்சாமி ஆலத்துரான்பட்டி, திண்டுக்கல்.
8 கருப்பையா ஆலத்துரான்பட்டி, திண்டுக்கல்.
9 முருகன் ஆலத்துரான்பட்டி, திண்டுக்கல்.
10 கந்தன் ஆலத்துரான்பட்டி, திண்டுக்கல்.
11 விசுவாசம் கதிரியன் குளம், திண்டுக்கல்
12 கோயில் ஆரோக்கியம் அனுமந்தராயன் கோட்டை, திண்டுக்கல்
13 லாரி டிரைவர் திண்டுக்கல்
விவசாய சொந்தங்கள் சற்று கனிவோடு அந்தத் தியாகிகளை நினைத்துப் பாருங்கள். அந்த தியாகிகளினால் தான் இலவச மின்சாரம் என்ற உரிமை கிடைத்தது. அது இன்று பறிபோகின்ற நிலைமை உள்ளது.
இவ்வாறு கே.எஸ். ராதாகிருஷ்ணன் பதிவு செய்துள்ளார்.