இரவோடு இரவாக.. எடப்பாடிக்கு போன அதிர்ச்சி செய்தி.. அஸ்திவாரத்தையே அசைத்த ஓபிஎஸ்.. என்ன நடந்தது?
சேலம்: அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் நேற்று இரவோடு இரவாக நடந்த சம்பவம் ஒன்று எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
அதிமுக உட்கட்சி பூசல் கிளைமேக்ஸை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழு வழக்கு வரும் செவ்வாய் கிழமை நடக்க உள்ளது. அதன்பின் வழக்கில் டிசம்பர் அல்லது ஜனவரி இறுதிக்குள் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கில் வரும் தீர்ப்பை பொறுத்தே அதிமுகவின் எதிர்காலம் இருக்கிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு இருக்கிறதா.. அல்லது ஓ பன்னீர்செல்வம்தான் அதிமுகவில் அதிக அதிகாரம் படைத்தவரா என்பது இந்த வழக்கு விசாரணையின் முடிவில் தெரிந்துவிடும்.
குஜராத் முதற்கட்ட தேர்தல்: 60.23 சதவீத ஓட்டுக்கள் பதிவு.. 2017யை ஒப்பிட்டால் வாக்குப்பதிவு மந்தமாம்!
நிர்வாகிகள்
இதற்கு இடையில்தான் அதிமுகவில் நிர்வாகிகள் அடுத்தடுத்து அணி மாறிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு நாள் எடப்பாடி அணியில் இருக்கும் நிர்வாகிகள் திடீரென ஒருநாள் ஓ பன்னீர்செல்வம் அணியில் இணைகிறார்கள். ஒருநாள் ஓ பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் நிர்வாகிகள் திடீரென எடப்பாடி அணிக்கு ஒருநாள் செல்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் திருப்பூர் அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் ஒரு பெரிய டீம் அப்படியே எடப்பாடி டீமில் இருந்து ஓ பன்னீர்செல்வம் டீமிற்கு சென்றது . மாவட்ட துணைச் செயலாளர் கனிஷ்கா சிவக்குமாரும் ஓ பன்னீர்செல்வம் அணியில் இணைந்து உள்ளார். அதேபோல் தாராபுரம் நகர செயலாளர் காமராஜ் ஓ பன்னீர்செல்வம் அணிக்கு சென்றுள்ளார். இவர் எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமாக இருந்தவர்.
எத்தனை பேர்
இது எடப்பாடி தரப்பிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. மொத்தமாக 350 நிர்வாகிகள் ஓ பன்னீர்செல்வம் அணியில் இணைந்து உள்ளனர். தேனியில் உள்ள ஓ பன்னீர்செல்வம் வீட்டில் அவரை சந்தித்து இவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில்தான் நேற்று இரவோடு இரவாக சேலம் சங்ககிரி தொகுதியை சார்ந்த 100க்கும் மேற்பட்டோர் இ.பி.எஸ் அணியிலிருந்து ஓபிஎஸ் அணிக்கு தாவி உள்ளனர். மாவட்ட அளவிலான நிர்வாகிகள் பலர் தாவி உள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று கோவையில் ஆர்ப்பாட்டம் நடக்கும் அதே நாளில்தான் கொங்கு மண்டலத்தில் இவ்வளவு பெரிய சரிவை எடப்பாடி பழனிசாமி தரப்பு சந்தித்து உள்ளது. சேலம்தான் எடப்பாடியின் அரசியல் அஸ்திவாரம். அதையே தற்போது ஓ பன்னீர்செல்வம் அசைத்து பார்த்து இருக்கிறார்.
சேலம் நிர்வாகிகள்
எடப்பாடி அணியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் அணிக்கு தாவிய நிர்வாகிகள் பேசுகையில், எடப்பாடி பழனிசாமி கட்சியை ஒரு ஜாதிக்கான கட்சியாக மாற்றிக்கொண்டு இருக்கிறார். ஒரு சமூகம் மட்டுமே வளருகிறது. அந்த சமூகத்திற்கு மட்டுமே இவர் முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டு இருக்கிறார். அதனால் அவரை விட்டு வெளியே வந்துள்ளோம். ஓ பன்னீர்செல்வம்தான் அதிமுகவின் உண்மையான தலைவர். அவர்தான் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டன். அவருக்குத்தான் தொண்டர்கள் ஆதரவு இருக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை, என்று ஓ பன்னீர்செல்வம் அணியில் இணைந்த நிர்வாகிகள் தெரிவித்து உள்ளது. கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமி மீது பலர் அப்செட்டில் இருக்கிறார்கள். கொங்கு மண்டலமே அவருடைய கையில் இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. அதை உடைக்கும் வகையில்தான் தற்போது நிர்வாகிகள் அணி மாறி உள்ளனர்.
எடப்பாடி
சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னைக்கு வந்தார். இவரை ஓ பன்னீர்செல்வம் சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை. அமித் ஷாவை ஏன் எடப்பாடி சந்திக்கவில்லை? எதுவும் மோதலா? கருத்து வேறுபாடா என்ற கேள்விகள் எழும்ப தொடங்கின. இது குறித்து கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் மேலும் விவாதங்களை தீவிரமாக்கியது. அமித் ஷா குறித்த கேள்விக்கு எடப்பாடி அளித்த பந்தலில், அதிமுக பாஜக என்பது வேறு வேறு கட்சிகள். அதிமுகதான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி. பாஜக என்பது தேசிய கட்சி. அதிமுக என்பது பிரதான மாநில கட்சி. அப்படி இருக்கும் போது அமித் ஷா தமிழ்நாடு வரும் போதெல்லாம் அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒவ்வொருமுறை வரும்போதெல்லாம் போய் சந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு உள்ளார். இவரின் பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அமித் ஷாவை சந்திக்க நான் நேரம் கேட்கவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார் எடப்பாடி. இவரின் பேச்சு காரணமாக எடப்பாடி - பாஜக இடையே மோதல் நிலவுகிறதோ என்ற கேள்வியும் எழுந்தது.
கோபம்
பாஜகவை எடப்பாடி எதிர்த்த காரணத்தால் அவருக்கு நெருக்கமான சிலரே அவர் மீது அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. எடப்பாடி தேவையின்றி அமித் ஷா பற்றி பேசுவிட்டார். அவர் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டார். வார்த்தையைவிட்டுவிட்டார்.. அவரின் பேச்சால் எங்களுக்குத்தான் சிக்கல். அமித் ஷாவை எடப்பாடி சீண்டி விட்டார். அது தவறு. டெல்லி ரெய்டு விட்டால் என்ன செய்வது. ஓ பன்னீர்செல்வம் பொறுமையாக இருக்கிறார். அவர் யாரையும் பகைத்துக்கொள்வது கிடையாது. திமுகவை கூட அவர் பகைக்கவில்லை. இப்போது இப்படி சேப் கேம் ஆடுவதே சரியானது என்று சில அதிமுக நிர்வாகிகள் கருதுகிறார்களாம். அதனால் எடப்பாடிக்கு கீழ் இருந்து டெல்லியின் கோபத்தை சம்பாதிக்க வேண்டாம் என்று பலர் ஓ பன்னீர்செல்வம் அணிக்கு தாவி வருகிறார்களாம்.