சாப்பாடு இல்லை.. என் குழந்தையை பாத்துக்கோங்க.. கடிதத்துடன் குழந்தையை சர்ச் வாசலில் விட்டுசென்ற பெண்
சென்னை: சென்னை சாஸ்திரி நகர் பகுதியில் கைக் குழந்தையை உருக்கமான ஒரு கடிதத்துடன் பெண் ஒருவர் விட்டுச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Recommended Video
சென்னை சாஸ்திரி நகர், பத்மநாபா நகர் 5 ஆவது குறுக்குத் தெருவில் உள்ள தேவாலயம் முன்பு நேற்று மாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரின் முன் சக்கரத்தின் கீழ் துணியால் சுற்றப்பட்ட கைக் குழந்தையின் அலறல் சப்தம் கேட்டது.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் நேற்று போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த சாஸ்திரி நகர் போலீஸார் வந்தனர். அழுதுக் கொண்டிருந்த குழந்தையை மீட்டனர்.
குழந்தை
அப்போது விசாரணையில் அந்த குழந்தை பிறந்து 2 மாதங்களே ஆன ஆண் குழந்தை என தெரியவந்துள்ளது. குழந்தை சுற்றப்பட்டிருந்த துணியில் ஒரு கடிதமும் இருந்தது. அதை போலீஸார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் அந்த குழந்தையின் தாய் மிகவும் உருக்கமாக எழுதியிருந்தார். அவர் தனது கடிதத்தில் கூறுகையில் " என்னை மன்னித்துவிடுங்கள். இந்த குழந்தையை என்னால் பராமரிக்க முடியவில்லை.
பணம்
பராமரிக்கும் அளவுக்கு பணமும் இல்லை. ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறேன். என் பிள்ளையை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். என் குழந்தையை எங்க விட்டுட்டு போவது என தெரியாமல் விட்டுட்டு போகிறேன். பத்திரமா பார்த்துக் கொள்ளவும். மத போதகர் கிட்ட சொல்லி குழந்தையை பத்திரமா பார்த்துக் கொள்ளுங்கள்.
குழந்தைகள் நல காப்பகம்
குழந்தையில்லாதவங்ககிட்ட கொடுத்துவிடுங்கள். என்னை மன்னித்துவிடுங்கள் என கடிதத்தில் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அந்த குழந்தையை சாஸ்திரி நகர் உதவி ஆய்வாளர் விமலா உயரதிகாரிளுக்கு தகவல் அளித்து குழந்தையை காவல் நிலையத்துக்கு எடுத்து வந்தார். குழந்தையின் பசிக்கு பால் கொடுக்கப்பட்ட பின்னர் மருத்துவ பரிசோதனை செய்து அண்ணாநகரில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தின் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சிசிடிவி காட்சி
குழந்தைகள் நல காப்பக அதிகாரிகள் நேற்றிரவு காவல் நிலையம் வந்து குழந்தையை காப்பகத்தில் வைத்து பராமரித்து வருகின்றனர். மேலும் போலீஸார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போது ஒரு பெண் தலையை துணியால் மறைத்தபடி குழந்தையை விட்டு செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸாரால் ஆய்வு செய்ய முடியவில்லை. அந்த பெண் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.