"ஹைஜாக்".. வெல்வது ஒருவர்.. ஆட்சியில் இன்னொருவர்.. "திருடப்படும் தீர்ப்புகள்".. இனிமேல் இப்படிதானா?
புதுச்சேரி அரசியல் மக்களுக்கு நிறைய பாடங்களை உணர்த்தி உள்ளது
சென்னை: தேர்தலில் கஷ்டப்பட்டு போட்டியிட்டு ஜெயிப்பது ஒரு கட்சியாகவும், கொஞ்சம் கூட அலுங்காமல் குலுங்காமல் ஆட்சியமைப்பது ஒரு கட்சியாகவும் இருந்தால் எப்படி இருக்கும்.. நினைக்கவே அதிர்ச்சியாக இருக்கிறதா.. ஆனால் இது எதிர்காலத்தில் நிரந்தரமாக கூடிய அபாயங்கள் இப்போதே தென்பட ஆரம்பித்து விட்டன.
ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை அரசியல் ஓரளவு நன்றாகத்தான் இருந்தது. அப்போதும் கூட மொள்ளமாரித்தனங்கள் இருந்தது என்றாலும் கூட ரொம்ப மோசமாக போக மாட்டார்கள்.
ஓரளவுக்கு தகிடுதத்தங்கள் நடைபெறுமே தவிர, மொத்த அரசியலும் மோசடியாக இருந்தது இல்லை... அடிப்படை தர்மம் இருந்தது.. அந்த தர்மத்துக்கு மக்கள் கட்டுப்பட்டார்கள்.. ஜனநாயக மாண்பு ஆங்காங்கே தென்பட்டபடியே இருந்தன.
மோசம்
ஆனால் இப்போது அரசியல் அப்படி இல்லை. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மோசமாகி இருக்கிறது. மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் நிற்கிறார்கள். அரசியலில் தற்போது புது டிரெண்டு உருவாகி வருகிறது. அதாவது ஓட்டுப் போடுவது ஒருவருக்கு, ஆட்சியில்அமர்வது இன்னொருவர் என்று இருந்தால் மக்களுக்கு எப்படி அதிர்ச்சியாக இருக்கும். அப்படித்தான் இப்போது நடந்து வருகிறது.
தீர்ப்பு
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் பதவியில் நீடிக்க சிலர் அனுமதிப்பது இல்லை. மாறாக அந்த தீர்ப்பையே ஹைஜாக் செய்து துவம்சம் செய்யும் புதிய கலாச்சாரம் புறப்பட்டுள்ளது. அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு கட்சி, ஆட்சியில் அமர்வது இன்னொரு கட்சி என்ற அபாயகரமான பழக்கம்தான் இப்போது புதிதாக முளை விடத் தொடங்கியுள்ளது.
அதிர்ச்சி
இந்திய அளவில் இந்த புதிய பழக்கம் உருவாகி பலரையும் அதிர வைக்கிறது. இதற்கெல்லாம் முக்கியக் காரணமே பணத்திற்கு விலை போகும் பிரதிநிதிகளை மக்கள் தவறுதலாக தேர்ந்தெடுப்பதுதான். அதை விட முக்கிமயாக, மக்கள் பணத்திற்கு தங்களது ஓட்டுக்களை விற்கும் கொடுமையும் ஒழியாமல் இருப்பதால் இதுபோன்ற அக்கிரமங்களும் தொடரத்தான் செய்யும்.
ஹைஜாக்
மக்களின் தீர்ப்புகளை ஹைஜாக் செய்யும் புதியவரலாற்றின் நீட்சிதான் புதுச்சேரி சம்பவம். கண் மூடித் திறப்பதற்குள்ளாக காணாமல் போய் விட்டது நாராயணசாமி ஆட்சி. 5 எம்எல்ஏக்களை அழகாக மடக்கி தங்கள் பக்கம் திருப்பி ஒரு ஆட்சியையே காணாமல் போகச் செய்து விட்டனர். எதிர்க்கட்சிகள் இதை ஜனநாயகப் படுகொலை என்று வர்ணிக்கின்றனர்.நாளை இது தமிழகத்திலும் நடைபெறும் என்று தொல். திருமாவளவன் எச்சரிக்கையே விடுத்துள்ளார். மிக மிக அழகான அறிக்கை ஒன்றையும் கூட திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.
ஜனநாயகம்
ஆனால் இது புதிய ஜனநாயகமாக மாறப் போகிறது என்பதுதான் கசப்பான உண்மை. . இது இத்தோடு முடியாது.. ஒவ்வொரு மாநிலத்திற்கும் பரவும். பல கட்சிகள் காலியாகவும், காவு வாங்கப்படும்.. இதெல்லாம் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் அப்பழுக்கற்ற, தூய்மையான, நேர்மையான, தைரியமான, ஸ்திரமான அரசியல்வாதிகள் தேவை.. அப்படிப்பட்ட வேட்பாளர்கள் வந்தால் மட்டுமே இந்த புதிய கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். அப்படி இல்லாமல் ஊழலில் ஊறிப் போன மட்டைகளுக்கு மறுபடியும் மறுபடியும் சீட் கொடுத்தால் நிச்சயம் வெல்வது ஒரு கட்சி.. ஆளுவது ஒரு கட்சி என்ற காட்சிதான் தொடரும்.
எது எப்படி இருப்பினும் இன்னும் பல ஆண்டுகளுக்களுக்கு பெரும் சோதனைக்காலம்தான்.. அரசியல்வாதிகளுக்கு அல்ல.. மக்களுக்கு!