வலியால் துடித்த பாலா... சென்னையில் மூடப்பட்ட ரயில்வே கேட்.. 15 நிமிட தாமதத்தால் பறிபோன உயிர்
சென்னை: சென்னை சிங்கபெருமாள் கோயில் ரயில்வே கேட் மூடப்பட்டதால் 15 நிமிடம் தாமதமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார்.. இதனால் அந்த பகுதியில் நடந்து வரும் மேம்பால பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையை அடுத்த மறைமலைநகர் அருகே உள்ள திருக்கச்சூர் மனுமேடு பகுதியை சேர்ந்த பாலா பிளம்பர் மற்றும் எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார். இவருக்கு செவ்வாய்கிழமை மாலையில் திடீரென வலிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் உடனடியாக உறவினர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு பாலாவை ஆட்டோவில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளார்கள்.

திருக்கச்சூர் மனுமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட்டை கடந்து தான் எந்த பகுதிக்கும் செல்ல முடியும்.. அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால் அந்த பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த சூழலில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட பாலாவை ஆட்டோவில் ஏற்றி அந்த வழியாக அழைத்துச் சென்றுள்ளார்கள் அவரது உறவினர்கள். பாலாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. இதனால் நீண்ட நேரம் ரயில்வே கேட்டில் ஆட்டோவிலேயே பாலா துடிதுடித்துக் கொண்டிருக்கிறார்கள்
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்த பாலாவின் உறவினர்கள், உடனடியாக பாலாவை தூக்கிக் கொண்டு ரயில்வே தண்டவாளத்தை கடந்து விடலாம் என்று அவர்கள் முடிவு செய்தார்கள். இதன்படி ரயில்வே கேட்டில் அணிவகுத்த வாகனங்களுக்கு மத்தியில் நெரிசலுக்கிடையே 4 பேர் பாலாவின் கை, கால்களை பிடித்துக்கொண்டு விரைந்து தூக்கிச் சென்றார்கள்.
நோயாளி பாலாவை தூக்கிக்கொண்டு அவரது உறவினர்கள் தண்டவாளத்தை கடந்து சென்றதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்தார்.. அந்த வீடியோ தான் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.. இதனிடையே பாலாவை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் உறவினர்கள் கதறி அழுதனர்.. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக ஆஸ்பத்திரிக்கு சென்றதால் பாலாவின் உயிரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்று அவரது உறவினர்கள் வேதனையுடன் கூறினார்கள்..
சிங்கபெருமாள் கோவில் ரெயில்வே கேட்டை கடந்து தினமும் பல ரெயில்கள் செல்வதால் அந்த கேட் அடிக்கடி மூடப்படும் நிலையில் அப்பகுதியில் நடைபெறும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்..












Click it and Unblock the Notifications