இன்றே தாழ்வு மண்டலமாக வலுபெறும் தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மழை "கன்பாஃர்ம்".. வானிலை அப்டேட்
சென்னையை பொறுத்த அளவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகம் மூட்டத்துடன் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது அடுத்த இரண்டு நாட்களுக்கு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும். அதன் பின்னர் தொடர்ந்து மேற்று மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து 31ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து பிப்ரவரி 1ம் தேதி இலங்கை கடற்பகுதியை சென்றடையும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அதிகாலையில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் ஓரிரு நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் இருப்பதும் லேசான தூறல் போடுவதுமாக வானிலை இருந்து வந்தது. இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தூறல் மட்டுமல்லாது லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆய்வு மையம் மேலும் கூறியுள்ளதாவது, "இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஜன.28ம்) வறண்ட வானிலை நிலவும். ஓரிரு இடங்களில் இயல்பான வெப்பநிலை மேலும் 2-3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும். நாளை வடதமிழக கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் இதே அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் அதாவது 30 மற்றும் 31ம் தேதியன்று புதுச்சேரி, காரைக்காலுடன் சேர்த்து தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், அதையொட்டிய உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்த அளவில், இன்று முதல் பூமத்திய ரேகையையொட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனையொட்டி உள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும் இடையிடையே சுமார் 55 கி.மீ வேகத்திலும் காற்று வீசக்கூடும். நாளை (ஜன.29) இலங்கையையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40-45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
எனவே இன்றும் நாளையும் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்" என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையை பொறுத்த அளவில் பெரும்பாலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.