முதலாளி வேலையை விட்டு நீக்கினார்.. முதல்வரை கடத்த போறதா மிரட்டினேன்.. சிக்கிய ரஹமதுல்லா!
முதல்வரை கடத்த போவதாக மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்
சென்னை: "என்னை வேலையில் இருந்து முதலாளி நிறுத்திட்டார்... ரொம்ப டென்ஷனா இருந்தேன்.. அந்த ஆத்திரத்துல தான் முதல்வரை கடத்த போறதா சொல்லிட்டேன்" என்று மிரட்டல் விடுத்த நபர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னை போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய ஒரு மர்ம நபர், "முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடத்தப்போகிறேன்" என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் சொன்னார்கள். கன்ட்ரோல் ரூமுக்கு வந்த அந்த செல்போன் நம்பரை வைத்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரங்களை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர்.
மிரட்டல் விடுத்தவர் திருச்சி தில்லை நகரை சேர்ந்த ரஹமதுல்லா, வயசு 45 என்பது தெரியவந்தது. இந்த தகவலை சென்னை போலீசார், திருச்சி தில்லைநகர் போலீசாருக்கு சொன்னார்கள். கொஞ்ச நேரத்தில் ரஹமதுல்லா வீட்டில் தில்லை போலீசார் நின்றுவிட்டார்கள். அவர்களை பார்த்ததும் ரஹமதுல்லாவுக்கு வியர்த்து விறுவிறுத்துவிட்டது.
வீட்டிலேயே அவரை கைது செய்த போலீசார் ஸ்டேஷன் கொண்டு வந்து விசாரித்தனர். அப்போது, "நான் ஒரு ஃபாஸ்ட் புட் கடையில் வேலை பார்த்தேன். என் ஓனர் என்னை வேலையில் இருந்து நிறுத்திட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்தேன். அந்த ஆத்திரத்தில் முதல்வரை கடத்த போறதாக பேசிட்டேன்" என்றார். இதைதொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.