எண்ணூரில் பால் வாங்க சென்ற போது.. மின்சாரம் பாய்ந்து பழைய இரும்பு வியாபாரி பலி
சென்னை: சென்னை எண்ணூரில் பால் கடைக்கு சென்ற பழைய இரும்பு வியாபாரி மின்சாரம் பாய்ந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை எண்ணூர், சத்தியவாணி முத்து நகர், 12வது தெரு தெருவைச் சேர்ந்தவர் செல்வின் (50). பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இன்று காலை முதல் நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும்.
இந்நிலையில் விடியற்காலை தூங்கி எழுந்த செல்வின் சீக்கிரமாக சென்று பால் வாங்கி வர வேண்டும் என்பதற்காக தாழங்குப்பத்தில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார் . பால் கடைக்கு அருகாமையில் சென்றபோது அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் கால் வைத்ததால் செல்வின் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
இதை பார்த்த பால் கடை நடத்தி வரும் தாழங்குகுப்பம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாதவன்(48) என்பவர் ஓடிவந்து அவரை காப்பாற்ற முயன்ற போது அவருக்கும் மின் தாக்குதல் ஏற்பட்டு அவரும் தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்த பொதுமக்கள் அவர்கள் அருகில் செல்லாமல் உடனடியாக எண்ணூர் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
மூடிய மதுக்கடைகள் மூடியதாகவே இருக்கட்டும்- மதுவிலக்கை அமல்படுத்த நாம் தமிழர் கட்சி வலியுறுத்தல்
இதையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த எண்ணூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பார்த்தபோது செல்வின் அந்த இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. மாதவன் மயங்கிய நிலையில் இருந்தார். இதையடுத்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த செல்வின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அது போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு பெண் மின்னல் தாக்கியதில் இறந்தார்.