சென்னை ஏர்போர்ட் அருகே "கடத்தி" எரிக்கப்பட்ட கடற்படை வீரர்.. வழக்கில் திருப்பம்.. குழம்பும் போலீஸ்
சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு வெளியே கடத்தப்பட்டதாக கூறப்படும் கடற்படை வீரர் சூரஜ் குமார் தூபே, மகாராஷ்டிராவில், எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். அவரது மரண வாக்குமூலமும், நடந்த சம்பவங்களும் மாறுபாடாக உள்ளன.
பிப்ரவரி 5ம் தேதி. ஜார்கண்ட்டைச் சேர்ந்த சூரஜ் குமார் தூபே, மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தின் ஒரு மலையிலிருந்து, பாதி எரிந்த நிலையில் துடித்தபடி கீழே ஓடி வந்தார்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் சிலர், இவரை அங்குள்ள மருத்துமவனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். காவல்துறையும் சம்பவ இடத்திற்கு விரைந்தது.
திடுக்கிடும் வாக்குமூலம்
அப்போது சூரஜ் குமார் தூபே, இந்திய கடற்படையில் பணியாற்றுபவர் என்பது தெரியவந்தது. சூரஜ் குமார் தூபே தனது மரண வாக்குமூலத்தில் சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜனவரி 30ம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தேன். அப்போது சிலர் துப்பாக்கியை எனது முன்பாக நீட்டினர்.
துப்பாக்கி முனையில்
அவர்கள் மிரட்டி எஸ்யூவி வண்டிக்குள் ஏறச் சொன்னார்கள். அப்படித்தான் செய்தேன். 3 நாட்கள் சென்னையில் அடைத்து வைத்து, பணம் கேட்டு மிரட்டினார்கள். ஆனால் எப்படி மகாராஷ்டிரா அழைத்து வந்தார்களோ தெரியவில்லை. இங்கே வந்து பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டார்கள். இவ்வாறு சூரஜ் குமார் தூபே அவரது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
சிசிடிவி காட்சி
இதையடுத்து போலீசார் தங்களது விசாரணையை துவங்கினர். ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியைச், சேர்ந்தவர் சூரஜ். ராஞ்சியிலிருந்து ஜனவரி 30ம் தேதி சென்னை விமான நிலையம் வந்துள்ளார். ஆனால், விமான நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தால், சூரஜ், அவர் பாட்டுக்கு ஹாயாக ஹோட்டலுக்குத்தான் போயுள்ளார். துப்பாக்கி முனையில் யாருமே கடத்தவில்லையாம்.
யாருக்கும் தெரியாமல் சிம் கார்டு
அவரது செல்போன் எண்களை ஆய்வு செய்து பார்த்தபோது, மொத்தம் 3 சிம் கார்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது. அதில் ஒரு சிம் கார்டு எண்ணை பங்குச் சந்தை முதலீடுகளுக்கு பயன்படுத்தியுள்ளார். ஆனால், இந்த நம்பர் குறித்து அவரது குடும்பத்தாருக்கே தெரியாது. மேலும் சூரஜ் தனது கூட வேலை பார்ப்பவர்கள், வங்கி என பல இடங்களில் இருந்தும், பல லட்சம் கடன் வாங்கியுள்ளார். விரைவில் அதை செக் மூலம் திருப்பித் தருவதாக கூட வேலை பார்ப்பவர்களிடம் உறுதி கொடுத்துள்ளார்.