வங்க கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. நாளை காற்றழுத்த மண்டலம்.. வருகிறது கன மழை
சென்னை: வங்கக் கடலில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் டிசம்பர் 3ம் தேதி வரை கன மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜவாத் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளது.
Recommended Video
குமரி கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், பிற மாவட்ட பகுதிகளில் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான அளவு வரையிலும் மழை பெய்யக்கூடும்.
Cyclone Jawad: டிசம்பர் 3 ல் அந்தமான் கடலில் ஜாவத் புயல்?.. யார் பெயர் வைத்தது தெரியுமா?
நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள் மற்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை நிலவரம்
சென்னையை பொறுத்த அளவில் வானம், மேக மூட்டத்துடன் காணப்படும். லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் ஒன்றாம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும். தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே அது தொடர்ந்து, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
காற்று வீசும்
இதனிடையே தமிழக பேரிடர் மேலாண்மை அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரி பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன மழை
மேலும், கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருநெல்வேலி, மதுரை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்புகள்
இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் படுகிறது. நேற்று இரவு, திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டது. இன்று காலை முதல் பல்வேறு மாவட்ட நிர்வாகங்களும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என வரிசையாக அறிவித்துக் கொண்டிருக்கின்றன.