ஓஹோ இதுதான் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையா.. வைரலாகும் புகைப்படம்.. கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்!
சென்னை: விஜயகாந்தை மரியாதை நிமித்தமாகவும் உடல்நலம் விசாரிக்கவும் மட்டுமே சந்தித்ததாக கோயல் கூறிய நிலையில் தற்போது பின்வாசலில் கோயலும் சுதீஷும் பேசும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
கடந்த மக்களவை தேர்தலில் தேமுதிக பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த நிலையில் தேமுதிகவை எப்படியாவது அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என பாஜகவுக்கு அதிமுக அசைன்மென்ட் கொடுத்தது.
அதன்படி சென்னையில் அதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து கொண்ட பியூஷ் கோயல் நேராக விஜயகாந்தின் வீட்டுக்கு சென்றார். அங்கு விஜயகாந்துடன் பேசிவிட்டு வெளியே வந்த கோயல் செய்தியாளர்களை சந்தித்தார்.
கூட்டணி
அப்போது அவர் கூறுகையில் விஜயகாந்தை மரியாதை நிமித்தமாகவும் உடல்நலம் விசாரிக்கவும் சந்தித்ததாக கோயல் தெரிவித்திருந்தார். கூட்டணி குறித்து பேசினீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
மனித உறவு
அதற்கு அவர், இந்த சந்திப்பிற்கு பின் எந்த அரசியலும் கிடையாது. எப்போதும் எல்லா சந்திப்பிலும் அரசியல் பேச வேண்டும் என்பதில்லை. தனிப்பட்ட மனித உறவுகளுக்காகவும் ஒருவரையொருவர் சந்தித்து கொள்வதுண்டு.
சுதீஷுடன் பேசும் புகைப்படம்
அதன்படி விஜயகாந்தின் உடல் நலம் குறித்து மட்டுமே நாங்கள் பேசினோம் என்று கூறினார். ஆனால் தற்போது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் பின்வாசலில் பியூஷ் கோயல், சுதீஷுடன் பேசும் புகைப்படம் உள்ளது.
நெட்டிசன்கள் கிண்டல்
கேட்டுக்கு உள் ஒரு பெண்ணின் கை தெரிகிறது. அது பிரேமலதாவா இல்லை தமிழிசையா என தெரியவில்லை. முன்வாசல் வழியாக வந்து விஜயகாந்தை நலம் விசாரித்த கோயல் அண்ட் கோ பின்வாசலில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
படம் பார்த்து கதை
அதிலும் இந்த புகைப்படத்தை பார்க்கும்போது ஏம்ப்பா சட்டுபுட்டுனு சீக்கிரம் ஏதாவது ஒரு முடிவுக்கு சொல்லுங்க. நான் டெல்லிக்கு போகணும், அமித்ஷா வைவாரு என்பதை போல் உள்ளது என நெட்டிசன்கள் கிண்டல் செய்கின்றனர்.