ஒரு மூட்ட நெல் இருக்கு.. உதவாம இங்கெதுக்கு #gaja
சென்னை: கஜா புயல் பாதிப்பு தொடர்பாக சென்னையைச் சேர்ந்த வாசகர் ஆர். ஆனந்த் எழுதி, வாசித்துள்ள ஒரு கவிதை. உங்களுக்காக...!
கோரம்.... அகோரம் .......
காதோரம் இன்னும் கஜா உன் ரீங்காரம்
யாரோ எவரோ செஞ்ச தப்புக்கு எங்கெங்கோ அலஞ்சி திரிஞ்சி
இங்க வந்து ஏன் சேந்த
வானம் பாத்து போன பிள்ளை எல்லாம் பூமி மேல சாஞ்சிடிச்சி
பட்டி காடா இருந்த ஊரூ இப்போ பட்டினி காடா ஆகிடிச்சி
ஓலயால செஞ்ச வீடெல்லாம் இப்போ ஒல சத்தம் கேட்க்குதடா
கம்பு போல நின்ன நெல்லெல்லாம் நேத்தே காத்தோட போனதடா
மூணு நாளு கழிச்சி வந்திருந்தா எம் பொண்ணோட மூணு நாளு முடிஞ்சிருக்கும்
இப்போ அரைத்துணிக்கு நிக்கும் போது அது அடுத்தவனுக்கும் தெரிஞ்சிருக்கும்
என்னோட கிடந்தவள இப்படி சொல்லாம கூட்டி போனியே சம்சாரம் எனக்கில்ல
வாய்க்கா வரப்பெல்லாம் வறளாம பாத்துகிட்ட மின்சாரம் இங்கில்ல
பசுங்கண்ணே நீ ஏண்டி பாலுக்காக காத்திருக்க?
பாதி உயிர் போய்தான உன் தாய் இன்னா படுத்திருக்கா
என் ராசாத்தி இருந்திருந்தா அவ நெஞ்ச குடுத்திருப்பா
கொடுத்து கொடுத்தே பழகுனவனுக்கு கொடுத்து உதவ யாரிருக்கா
என் பயிர் எல்லாம் கட்டி காக்க புயல் வராத ஊர் இருக்கா.
அடுத்தவன் பசியானா அடிவயிறு எனக்கு வலிக்கும்
ஒரு மூட்ட நெல் இருக்கு
உதவாம இங்கெதுக்கு....!