பாமக, வன்னியர் சங்கத்திற்கு தடை.. ராமதாஸ் மீது வழக்கு.. ஹைகோர்ட்டில் அவசர முறையீடு
சென்னை: வன்முறை சம்பவம் தொடர்பாக, பாமக மற்றும் வன்னியர் சங்கத்தை தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல முறையீடு செய்யப்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பாமக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது, போக்குவரத்துக்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, சென்னையில் ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடைபெற்றது. இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹைகோர்ட்டில் மனு
இந்த நிலையில்தான், பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மக்கள் மன்றத்தை சேர்ந்த வாராகி என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்து அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்தார்.
ராமதாஸ் மீது வழக்கு
பாமக மற்றும் வன்னியர் சங்கத்திற்கு தடை விதிக்க வேண்டும், டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கோரிக்கை விடுத்தார்.
நீதிபதிகள் உத்தரவு
மனுவாக தாக்கல் செய்தால் எந்த அமர்வு விசாரிக்க வேண்டுமென்பதை பதிவுத்துறை முடிவெடுக்கும் என்று நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா அமர்வு அறிவித்தது.
மனு தாக்கல்
இதையடுத்து மனு தாக்கல் செய்யும் பணிகளில் மனுதாரர் வாராகி ஈடுபட்டு வருகிறார். இன்று மாலை அல்லது நாளை காலை இந்த மனுவை தாக்கல் செய்யக்கூடும் என்று தெரிகிறது.